பொதட்டூர்பேட்டை அருகே மாயமான பள்ளி மாணவி எலும்புக்கூடாக கண்டெடுப்பு


பொதட்டூர்பேட்டை அருகே மாயமான பள்ளி மாணவி எலும்புக்கூடாக கண்டெடுப்பு
x
தினத்தந்தி 11 Feb 2019 11:00 PM GMT (Updated: 11 Feb 2019 6:48 PM GMT)

பள்ளிப்பட்டு பொதட்டூர்பேட்டை அருகே 5 மாதங்களுக்கு முன்பு மாயமான 10-ம் வகுப்பு மாணவி கொலை செய்யப்பட்டு எலும்புக்கூடாக கண்டெடுக்கப்பட்டார். கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

செங்குன்றம், 

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா கீச்சலம் அருகே புது வெங்கடாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. கட்டிட மேஸ்திரி. இவரது மகள் சரிதா (வயது 15). அப்பகுதியில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7-ந் தேதி வீட்டில் இருந்து பள்ளிக்கு செல்வதாக கூறி சென்றவர் வீட்டிற்கு திரும்பவில்லை என்று தெரிகிறது. இதனால் அவரது உறவினர்களும், நண்பர்களும் அவரை பல இடங்களில் தேடினார்கள்.

ஆனால் மாணவி சரிதாவை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து மாணவி சரிதாவின் தந்தை சுப்பிரமணி பொதட்டூர்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடிவந்தனர்.

இந்த நிலையில், கீச்சலம் கிராமம் அருகே விவசாயி சுரேஷ் என்பவர் தன்னுடைய நிலத்தில் கரும்பு அறுவடை செய்யும் வேலையில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது அங்கு உள்ள ஓடையில் மாணவி சரிதாவின் எலும்புக்கூடு இருப்பதை கண்டு அதிச்சி அடைந்தார்.

இது குறித்து உடனே அவர் பொதட்டூர்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கிருந்த எலும்புகளையும், கிழிந்த ஆடைகளையும் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.விசாரணையில், அந்த எலும்புக்கூடு 5 மாதங்களுக்கு முன் காணமல்போன பள்ளி மாணவி சரிதாவினுடையது என தெரியவந்தது.

இதையடுத்து, சம்பவ இடத்தை திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி, திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு சேகர் ஆகியோர் பார்வையிட்டனர். பள்ளி மாணவி சரிதாவின் சாவுக்கு காரணமான கொலையாளிகள் யார்? என்று போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story