ராசிபுரம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை கணக்கில் வராத ரூ.1.92 லட்சம் சிக்கியது


ராசிபுரம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை கணக்கில் வராத ரூ.1.92 லட்சம் சிக்கியது
x
தினத்தந்தி 11 Feb 2019 10:15 PM GMT (Updated: 11 Feb 2019 8:11 PM GMT)

ராசிபுரம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 92 ஆயிரத்து 715 சிக்கியது.

ராசிபுரம், 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம்-சேலம் ரோடு முத்துகாளிப்பட்டியில் அரசு போக்குவரத்து பணிமனை அருகே தமிழ்நாடு போக்குவரத்து துறையின் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு மோட்டார் வாகன கிரேடு-1 இன்ஸ்பெக்டராக சண்முக ஆனந்த், உதவியாளராக யுவராஜ், இளநிலை உதவியாளர்களாக சேகர், சக்தி, அலுவலக உதவியாளர் அந்தோணி ஆகியோர் பணி புரிந்து வருகின்றனர்.

இந்த அலுவலகத்தில் புதிய வாகன பதிவு, வாகன உரிமையாளர் பெயர் மாற்றம் உள்பட பல்வேறு பணிகளை மேற்கொள்ள பொதுமக்களிடம் லஞ்சம் பெறப்படுவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெய்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் நல்லம்மாள் உள்பட 8 பேர் கொண்ட குழுவினர் ராசிபுரம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் நேற்று திடீரென சோதனை நடத்தினர்.

அப்போது அலுவலகம் மற்றும் அங்கிருந்தவர்களிடம் இருந்து கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 92 ஆயிரத்து 715 இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களிடம் இருந்து அந்த பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் சோதனையின்போது அலுவலகத்தில் இருந்த மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் சண்முக ஆனந்த், அலுவலர்கள் மற்றும் புரோக்கர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்கள் கூறிய தகவல்களை கொண்டு, பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் ஆவணங்களை சரிபார்க்கும் பணியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஈடுபட்டனர். காலை 11.30 மணியளவில் தொடங்கிய சோதனை இரவு 9 மணிக்கும் மேலாக நீடித்தது. சோதனையின்போது மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தின் கதவுகள் மூடப்பட்டு இருந்தன. அலுவலக பணிகள் நடைபெறவில்லை. 9 மணி நேரத்திற்கு மேலாக நடந்த லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனை போக்குவரத்து துறையினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


சோதனை குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறியதாவது:-

ரகசிய தகவலின் பேரில் இந்த சோதனை நடந்தது. இதில் கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 92 ஆயிரத்து 715 சிக்கி உள்ளது. இது தொடர்பாக மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் சண்முக ஆனந்த், இளநிலை உதவியாளர் சக்தி, புரோக்கர்கள் குப்புராஜ், செந்தில்குமார், சாகுல்அமீது, முத்துசாமி, ரவி, குப்புசாமி, கருணாகரன் மற்றும் கணினி ஆபரேட்டர் சுரேஷ் என 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

கணினி ஆபரேட்டர் சுரேஷ் ஒப்பந்த காலம் முடிந்தும் பணியில் இருந்து வருவது தெரியவந்து உள்ளது. இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story