மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த போது கல்லூரி மாணவர்கள் உள்பட 3 பேர் வாகனம் மோதி பலி


மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த போது கல்லூரி மாணவர்கள் உள்பட 3 பேர் வாகனம் மோதி பலி
x
தினத்தந்தி 11 Feb 2019 10:15 PM GMT (Updated: 11 Feb 2019 8:36 PM GMT)

பாப்பிரெட்டிப்பட்டி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த போது வாகனம் மோதி கல்லூரி மாணவர்கள் உள்பட 3 பேர் பலியானார்கள்.

பொம்மிடி,

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள பாவக்கல் குப்பநத்தம் பகுதியை சேர்ந்தவர் திருமலை. இவருடைய மகன் ராஜேஷ் (வயது 20). இவர் நாமக்கல் அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கொடுக்காரப்பட்டியை சேர்ந்த திருப்பதி மகன் அரவிந்த்(20). இவர் ஊத்தங்கரை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். கரியபெருமாள் கரடு வலசை சேர்ந்த பலராமன் மகன் நிதிஷ்குமார்(20). இவர் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டார். இவர்கள் 3 பேரும் நண்பர்கள்.

இந்தநிலையில் குப்பநத்தம் பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) எருது விடும் விழா நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. இதற்காக அரவிந்த், நிதிஷ்குமார் ஆகிய 2 பேரும் நாமக்கல்லில் விடுதியில் தங்கி படித்து வந்த ராஜேசை அழைத்து வர சென்றனர். பின்னர் நண்பர்கள் 3 பேரும் நேற்று ஒரே மோட்டார் சைக்கிளில் ஊருக்கு சென்றனர். அப்போது தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மஞ்சவாடி கணவாய் கோம்பூர் பகுதியில் ஒரு வளைவில் திரும்பினர்.

அப்போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி சாலையோரம் இருந்த குழியில் விழுந்தது. இதில் ராஜேஷ், அரவிந்த் உள்ளிட்ட 3 பேரும் ரோட்டில் விழுந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாகனம் அவர்கள் 3 பேர் மீதும் ஏறிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் ராஜேஷ் உள்ளிட்ட 3 பேரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தனர்.

இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் இந்த விபத்து குறித்து 3 பேரின் பெற்றோர்களுக்கும் போலீசார் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்தவர்களின் உடல்களை பார்த்து கதறி அழுதனர்.

இதையடுத்து 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் நண்பர்கள் 3 பேர் இறந்ததால் அந்த கிராமங்கள் சோகத்தில் மூழ்கியது.

Next Story