வாக்காளர் சரிபார்ப்பு-தணிக்கை எந்திரம் குறித்து விழிப்புணர்வு பிரசார வாகனம்


வாக்காளர் சரிபார்ப்பு-தணிக்கை எந்திரம் குறித்து விழிப்புணர்வு பிரசார வாகனம்
x
தினத்தந்தி 11 Feb 2019 10:45 PM GMT (Updated: 11 Feb 2019 9:01 PM GMT)

வாக்காளர் சரிபார்ப்பு, தணிக்கை எந்திரம் குறித்த விழிப்புணர்வு பிரசார வாகனங்களை மாவட்ட வருவாய் அதிகாரி தொடங்கி வைத்தார்.

கரூர், 

வாக்காளர் சரிபார்ப்பு மற்றும் தணிக்கை எந்திரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான பிரசார வாகனங்களை தொகுதிவாரியாக அனுப்பிவைக்கும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கரூர் மாவட்டத்திற்கான கண்காணிப்பு அலுவலரும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் அரசுச்செயலருமான விஜயராஜ்குமார் முன்னிலையில், மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ் கொடியசைத்து விழிப்புணர்வு பிரசார வாகனங்களை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

வாக்காளர்கள் தாங்கள் வாக்களித்த சின்னத்திற்கு வாக்கு பதிவாகியுள்ளதா? என்பதை உறுதி செய்து கொள்ளும் வகையில், வரும் நாடாளுமன்ற தேர்தல் 2019-ல் வாக்காளர் சரிபார்ப்பு மற்றும் தணிக்கை எந்திரம் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பயன்படுத்தப்பட உள்ளது. இது தொடர்பாக வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் பயிற்சி அளிக்கும் வகையில் கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும், ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 6 வாகனங்கள் வீதம் மொத்தம் 24 வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வாகனத்திலும் வாக்காளர்களுக்கு செயல் விளக்கம் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த இரண்டு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கரூர் மாவட்டத்தில் 608 வாக்குச்சாவடி அமைவிடங்களில் உள்ள 1031 வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்களிக்க உள்ள வாக்காளர்களுக்கு அந்தந்த பகுதிக்கே சென்று செயல் விளக்கம் அளிக்க உள்ளனர்.

இதில் ஒவ்வொரு குழுவினரும் நாள் ஒன்றுக்கு நான்கு வாக்குச்சாவடி அமைவிடங்களுக்கு சென்று செயல் விளக்கம் அளிக்க உள்ளனர். மேலும், வாக்காளர்கள் இம்முகாமின்போது மாதிரி வாக்குப்பதிவு செய்து தாங்கள் வாக்களித்த சின்னத்திற்கு வாக்கு பதிவாகியுள்ளதா என்பதை வாக்காளர் சரிபார்ப்பு மற்றும் தணிக்கை எந்திரத்தில் சரிபார்த்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில், கரூர் வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி, வட்டாட்சியர்்கள் சிவக்குமார் (தேர்தல் பிரிவு), ஈஸ்வரன்(கரூர்), ரவிக்குமார்(மண்மங்கலம்) மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Next Story