இருவேறு இடங்களில் தீ விபத்து 6 குடிசை வீடுகள் எரிந்து நாசம்


இருவேறு இடங்களில் தீ விபத்து 6 குடிசை வீடுகள் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 11 Feb 2019 10:44 PM GMT (Updated: 11 Feb 2019 10:48 PM GMT)

முல்லுண்டு, சி.எஸ்.எம்.டி.யில் ஏற்பட்ட தீ விபத்துகளில் 6 குடிசை வீடுகள் எரிந்து நாசமாகின.

மும்பை,

மும்பை முல்லுண்டு கிழக்கு பகுதியில் நவ்கர் குடிசைப்பகுதி உள்ளது. இங்குள்ள ஒரு குடிசை வீட்டில் நேற்று மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தீ மளமளவென பக்கத்து வீடுகளுக்கும் பரவியது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடியிருப்புவாசிகள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

இந்த நிலையில், தீப்பிடித்து எரிந்த வீடுகளில் இருந்த சமையல் கியாஸ் சிலிண்டர்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. இதனால் அந்த பகுதியே கரும்புகையானது.

உடனே அவர்கள் இதுபற்றி தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் வாகனங்களில் விரைந்து வந்தனர். அவர்கள் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். இருப்பினும் இந்த தீ விபத்தில் அங்குள்ள 4 வீடுகள் எரிந்து நாசமாகின. வீடுகளில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து சாம்பலாகியது.

இதேபோல் சி.எஸ்.எம்.டி. பி.டி. மெல்லோ சாலையில் உள்ள குடிசை வீட்டில் தீ பிடித்தது. இதில் கொழுந்து விட்டு எரிந்த தீ பக்கத்தில் உள்ள வீட்டிற்கும் பரவியது. தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து குடிசை வீட்டில் பற்றி எரிந்த தீயை முற்றிலுமாக அணைத்தனர். இருப்பினும் 2 வீடுகள் தீயில் கருகி சாம்பலாகியது.

மேற்படி 2 தீ விபத்துகள் குறித்தும் அந்தந்த பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story