பொதுவாழ்க்கையில் நீடிக்க எடியூரப்பாவுக்கு தகுதி இல்லை - சித்தராமையா பேட்டி


பொதுவாழ்க்கையில் நீடிக்க எடியூரப்பாவுக்கு தகுதி இல்லை - சித்தராமையா பேட்டி
x
தினத்தந்தி 11 Feb 2019 11:16 PM GMT (Updated: 11 Feb 2019 11:16 PM GMT)

பொதுவாழ்க்கையில் நீடிக்க எடியூரப்பாவுக்கு தகுதி இல்லை என்று சித்தராமையா கூறினார். முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பெங்களூரு, 

ஜனதா தளம்(எஸ்) எம்.எல்.ஏ. மகனுடன் எடியூரப்பா நடத்திய பேரம் குறித்த ஆடியோ வெளியானது. அந்த ஆடியோவில் இருப்பது தனது குரல் இல்லை என்று எடியூரப்பா முதலில் கூறினார். அதை நிரூபித்தால் ராஜினாமா செய்வதாக கூறினார். பிறகு, அது தனது குரல் தான் என்று அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

அதனால் பொதுவாழ்க்கையில் இருக்க அவருக்கு தகுதி இல்லை. ரூ.10 கோடியுடன் மந்திரி பதவி வழங்குவதாக எடியூரப்பா ஆசை வார்த்தைகளை கூறி இருக்கிறார். இது குதிரை பேரம் இல்லாமல் வேறு என்ன?. முதல்-மந்திரி பதவியில் இருந்தவர் குறைந்தபட்ச அறிவுகூட இல்லாமல் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க முயற்சி செய்கிறார். இது ஜனநாயக விரோதமானது.

பிரதமா் மோடி சென்ற இடமெல்லாம் பொய் பேசுகிறார். ரபேல் போர் விமான கொள்முதல் ஊழல் குறித்து அவர் வாய் திறப்பது இல்லை. விவசாய கடனை தள்ளுபடி செய்யுமாறு நான் முதல்-மந்திரியாக இருந்தபோது 2 முறை கோரிக்கை விடுத்தேன். அதை அவர் கண்டுகொள்ளவில்லை. அவருக்கு பொய் சொல்வதை தவிர வேறு எதுவும் தெரியாது.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

Next Story