மோட்டார் சைக்கிளில் சென்று கத்திப்பாரா பாலத்தில் இருந்து விழுந்த கல்லூரி மாணவர் பலி


மோட்டார் சைக்கிளில் சென்று கத்திப்பாரா பாலத்தில் இருந்து விழுந்த கல்லூரி மாணவர் பலி
x
தினத்தந்தி 12 Feb 2019 10:45 PM GMT (Updated: 12 Feb 2019 4:36 PM GMT)

சென்னை கிண்டி கத்திப்பாரா பாலத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற கல்லூரி மாணவர் தவறி விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆலந்தூர், 

சென்னையை அடுத்த மடிப்பாக்கம் யோகேஸ்வரன் தெருவை சேர்ந்தவர் எட்வர்டு. இவரது மகன் ரோகன் அந்தோணி சாமுவேல் (வயது 20). இவர் பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. விஷுவல் கம்யூனிகேஷன் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவர், நேற்று மடிப்பாக்கத்தில் இருந்து கோடம்பாக்கத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.

கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் சென்றபோது, திடீரென சாலையின் ஓரத்தில் இருந்த தடுப்பில் மோதினார். இதில் நிலைதடுமாறிய சாமுவேல், மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்தார்.

இதில் அவருக்கு மார்பில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் அழகு மற்றும் போலீசார் விரைந்து சென்று உயிருக்கு போராடிய சாமுவேலை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சாமுவேல் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story