திருமுல்லைவாயல் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை ஆர்.டி.ஓ. விசாரணை


திருமுல்லைவாயல் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை ஆர்.டி.ஓ. விசாரணை
x
தினத்தந்தி 12 Feb 2019 11:00 PM GMT (Updated: 12 Feb 2019 4:48 PM GMT)

திருமுல்லைவாயல் அருகே திருமணமாகி 1½ ஆண்டு களான இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் ஆர்.டி.ஓ. விசாரணை நடக்கிறது.

ஆவடி,

திருமுல்லைவாயல் மாசிலாமனீஸ்வரர் நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 28). இவரது மனைவி அபிராமி (20). இவர்களது சொந்த ஊர் சேலம் ஆகும். இவர்கள் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். மணிகண்டன் காட்டூர் பகுதியில் உள்ள சிட்கோவில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்கிறார். அபிராமி அண்ணனூர் பகுதியில் உள்ள ஒரு போட்டோ ஸ்டுடியோவில் வேலை செய்து வந்தார்.

திருமணமாகி 1½ ஆண்டு ஆகியும் குழந்தைகள் இல்லை. இந்நிலையில் மணிகண்டன் நேற்று முன்தினம் காலையில் வேலைக்கு சென்றுவிட்டார். அபிராமி உடல்நிலை சரியில்லை என்று கூறி வீட்டில் இருந்தார். இவர்களுடன் வசிக்கும் அபிராமியின் மாமியார் ஜெயா வீட்டு வேலைக் காக வெளியே சென்று விட்டார்.

இந்நிலையில் வீட்டு வேலை முடிந்து மதியம் ஜெயா வீட்டுக்கு திரும்பி வந்தபோது, அபிராமி மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும், திருமுல்லைவாயல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அபிராமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக் காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து, திருமுல்லைவாயல் போலீசில் அபிராமியின் பெற்றோர் புகார் கொடுத்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அபிராமியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். அபிராமிக்கு திருமணமாகி 1½ ஆண்டுகள் ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடக்கிறது.

Next Story