கோவையில், பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய தந்தை கைது


கோவையில், பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய தந்தை கைது
x
தினத்தந்தி 12 Feb 2019 10:30 PM GMT (Updated: 12 Feb 2019 5:29 PM GMT)

கோவையில் பள்ளி மாணவியை கர்ப்பமாக்கியதாக அவருடைய தந்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பேரூர்,

கோவையில் உள்ள ஒரு பள்ளியில் 13 வயது மாணவி ஒருவர் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். அவர் தனது பெற்றோர் மற்றும் தங்கையுடன் வசித்து வருகிறார். அவருடைய தந்தை சுமை தூக்கும் கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்தார். கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அந்த சிறுமி பருவம் அடைந்து உள்ளார்.

அதன் பிறகு அந்த சிறுமிக்கு சரிவர மாதவிலக்கு ஏற்பட வில்லை. எனவே சிறுமியை அவருடைய தாயார் அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார மையத்துக்கு அழைத்து சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சிறுமி கர்ப்பமாக இருப்பதாகவும், உடனடியாக கோவை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கும்படியும் கூறி உள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாயார் சிறுமியை கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தார். இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் பேரூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் சுமை தூக்கும் தொழிலாளியான அந்த சிறுமியின் தந்தை, பணி முடிந்து வீட்டிற்கு வந்த பின்னர் யாரும் இல்லாத நேரத்தில் பெற்ற மகள் என்றும் பாராமல் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். மேலும் தான் வேலைக்கு சென்று வரும்போது களைப்பாக இருப்பதால் இவ்வாறு செய்வதாகவும், இது குறித்து வெளியில் கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதும் தெரியவந்தது.

இதையடுத்து அந்த சிறுமியின் தந்தை மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

கோவையில் பள்ளி மாணவியை தந்தையே கர்ப்பமாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கைதான தொழிலாளி காதலித்து திருமணம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story