பிரதமர் மோடிக்கு காங்கிரசை பார்த்து பயம் வந்துவிட்டது தமிழக காங்கிரஸ் செயல்தலைவர் பேட்டி


பிரதமர் மோடிக்கு காங்கிரசை பார்த்து பயம் வந்துவிட்டது தமிழக காங்கிரஸ் செயல்தலைவர் பேட்டி
x
தினத்தந்தி 12 Feb 2019 11:00 PM GMT (Updated: 12 Feb 2019 6:56 PM GMT)

பிரதமர் மோடிக்கு காங்கிரசை பார்த்து பயம் வந்து விட்டது என தமிழக காங்கிரஸ் செயல்தலைவர் மயூரா ஜெயக்குமார் கூறினார்.

முத்துப்பேட்டை,

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் தமிழக காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

காங்கிரஸ் கட்சியை தமிழகம் முழுவதும் வட்டார அளவில் வலுப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் புதிதாக தலைவர் மற்றும் 5 செயல் தலைவர்களை ராகுல் காந்தி நியமித்துள்ளார்.

தமிழகத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர், தஞ்சை, நாகை மாவட்ட பகுதிகளை பார்வையிட வராத பிரதமர் மோடி, தேர்தல் வருவதை கருத்தில் கொண்டு திருப்பூரில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அங்கு பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசி சென்றுள்ளார்.

தமிழகத்துக்கு கஷ்டகாலம் ஏற்பட்ட போதெல்லாம் வந்து பார்க்காமலும், அதற்கு உரிய நிதி ஒதுக்கீடுகளையும் செய்யாமல் புறக்கணித்த மோடி, தேர்தல் பயம் காரணமாக தற்போது தமிழகத்துக்கு வந்துள்ளார். பிரதமர் மோடிக்கு காங்கிரசை பார்த்து பயம் வந்துவிட்டது.

மோடிக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் அல்ல ஒட்டுமொத்த பா.ஜனதா அரசுக்கும் தான் இந்த கருப்புக்கொடி போராட்டம் என்பதை வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் உணர்த்துவார்கள். மின்னணு வாக்குப்பதிவு மூலம் தேர்தல் நடத்துவதை விட வாக்குச்சீட்டு முறையில் தேர்தலை நடத்துவது நம்பகத்தன்மையை அதிகரிக்கும்.பேட்டியின் போது திருவாரூர் மாவட்ட தலைவர் துரைவேலன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story