காந்தி உருவபொம்மை அவமதிப்பு பற்றி பேசியபோது மேடையில் கண்ணீர் சிந்திய வைகோ


காந்தி உருவபொம்மை அவமதிப்பு பற்றி பேசியபோது மேடையில் கண்ணீர் சிந்திய வைகோ
x
தினத்தந்தி 12 Feb 2019 11:15 PM GMT (Updated: 12 Feb 2019 7:46 PM GMT)

காந்தியின் உருவபொம்மை அவமதிப்பு செய்யப்பட்டது பற்றி பேசியபோது மேடையில் வைகோ கண்ணீர் சிந்தினார்.

திருச்சி,

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில், ‘இஸ்லாமிய தமிழ் இலக்கியங்கள்’ என்னும் தலைப்பில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சிறப்பு சொற்பொழிவாற்றினார்.

மாணவ-மாணவிகள் மத்தியில் வைகோ பேசுகையில், “மகாத்மா காந்தி தேசத்திற்கும், இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கும் அவர் ஆற்றிய பங்கு இன்றியமையாதது. நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த மகாத்மா காந்தியை, அவரது நினைவு தினத்தன்று உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் இந்து அமைப்பு தலைவி பூஜா பாண்டே, காந்தியடிகளின் உருவப் பொம்மையை சுட்டுக்கொண்டாடியது மனதை உருக்கியது” என்றார்.

இவ்வாறு மேடையில் வைகோ பேசியபோதே அவரது கண்கள் கலங்கி, கண்ணீர் சிந்தின. ஒருநிமிடம் பேசமுடியாமல் நின்ற அவர் கண்ணீரை துடைத்தபடி, அன்றைய தினம் காந்தியின் உருவத்தை அவர்கள் சித்தரித்த விதம் குறித்து நினைத்து பார்க்கவே முடியவில்லை என்று உருக்கமாக பேசினார். மேடையில் வைகோ கண்ணீர் சிந்தியபோது மாணவர்கள் மத்தியிலே நிசப்தம் நிலவியது.

பின்னர் வைகோ பேசியதாவது:-

கவிக்கோ அப்துல்ரகுமான் தோல்வி பற்றி மிக அழகாக கவிதை எழுதி உள்ளார். தோல்வியே நீ வாழ்க!, நீதான் என் பத்தினி!, ஏனென்றால் உன்னை யாரும் சொந்தம் கொண்டாட மாட்டார்கள். தோல்வியே நீதான் நான் சம்பாதிக்கும் பணம். அதை வைத்து வெற்றியை வாங்கி விடலாம் அல்லவா? (அப்போது வைகோ நான் அரசியலை சொல்லவில்லை, என்றார்). என அவர் அழகாக சொல்லி இருக்கிறார்.

தோல்வியை பற்றி பேசுவதற்கு எனக்கு நிறைய தகுதிகள் இருக்கிறது. ஏனெனில் தேர்தலில் நான் தோற்றுக்கொண்டே இருப்பவன். ஆனால் நான் ஒரு போராளி. தமிழ் மக்கள், காவிரி, முல்லைப்பெரியாறு பிரச்சினை, ஸ்டெர்லைட் பிரச்சினை, ஜனநாயகத்தை காப்பாற்றவும், இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காக நாட்டில் மதசார்பின்மையை நிலை நாட்டுவதற்காகவும் போராடிக் கொண்டே வருகிறேன். எனவே, மதசார்பின்மையை காக்கும் வரை எங்கள் வாள் உறைக்குள் போகாது. தமிழர் வாழ்வுக்காக தொடர்ந்து போராட்டம் நடத்தி கொண்டே இருப்பேன். அதனால்தான், நான் தோல்வியை தோல்வியாக நினைப்பது கிடையாது.

இவ்வாறு வைகோ பேசினார். 

Next Story