ஒரே நாளில் 15 தென்னை மரங்களை பிடுங்கி எறிந்தது சின்னதம்பி யானையால் வாழ்வாதாரம் பறிபோகிறதே? விவசாயிகள் கவலை


ஒரே நாளில் 15 தென்னை மரங்களை பிடுங்கி எறிந்தது சின்னதம்பி யானையால் வாழ்வாதாரம் பறிபோகிறதே? விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 12 Feb 2019 10:30 PM GMT (Updated: 12 Feb 2019 8:42 PM GMT)

மடத்துக்குளம் அருகே உள்ள கண்ணாடிபுத்தூர் பகுதியில் முகாமிட்டுள்ள சின்னதம்பி யானை நேற்று ஒரே நாளில் அப்பகுதியில் விவசாய நிலங்களில் உள்ள 15 தென்னை மரங்களை பிடுங்கி எறிந்துள்ளது. இதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

மடத்துக்குளம்,

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே உள்ள கண்ணாடிபுத்தூர் பகுதியில் அமைந்துள்ள அமராவதி ஆற்றுபகுதியை ஒட்டி, நூற்றுக்கணக்கான ஏக்கரில் விவசாயம் நடைபெற்று வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, கிருஷ்ணாபுரம் பகுதியில் இருந்து தப்பி வந்த சின்னதம்பி யானை தற்போது கண்ணாடிபுத்தூர் பகுதியில் உள்ள விவசாய நிலங்களை ஆக்கிரமித்துள்ளது. இதனால் கடந்த 6 நாட்களாக இப்பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் இருந்த கரும்பு, நெல், வெங்காயம், வாழை போன்ற பயிர்களை பிடுங்கி எறிந்து சேதப்படுத்தி வருவதால் தங்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுவதாக அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

அதற்கு ஏற்றவாறு சின்னதம்பி யானையும் நேற்று முன்தினம் இரவில், அருகில் உள்ள விவசாய பகுதியில் உள்ள பயிர்களை அதிக அளவில் சேதப்படுத்தியது. நேற்று அதிகாலையில் அருகில் உள்ள தென்னந்தோப்பில் இருக்கும் 15 தென்னை மரங்களை வேறோடு பிடுங்கி போட்டுள்ளது.

இதனால் கடந்த சில நாட்களாக கண்ணாடிபுத்தூர் பகுதியில் விவசாயிகளின் சேதத்தின் மதிப்பு உயர்ந்து கொண்டே போகிறது. இதனால் சின்னதம்பி யானைக்கு பொதுமக்கள் மத்தியில் ஆதரவும், அனுதாபமும் ஒருபுறம் இருந்து வந்தாலும், இப்பகுதியில் உள்ள விவசாயிகள் மத்தியில் கடுமையான எதிர்ப்பையும் சம்பாதித்து உள்ளது என்பதும் மறுக்க முடியாத உண்மை ஆகும்.

நீதிமன்றம் வழங்கும் தீர்ப்புகள் தள்ளி தள்ளிப்போவதால் சின்னதம்பி யானையை பிடிக்கும் திட்டம் தொடர்ந்து அதிகாரிகள் மத்தியில் சறுக்கல்களை உண்டாக்குகிறது.

இது தவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் வனத்துறை காவலர்கள் மற்றும் அதிகாரிகள் ஆகியோருக்கான செலவுகளும், தற்போது மிக அதிகமாக உள்ளது என்றார் வனத்துறை அதிகாரி ஒருவர். வழக்கம்போல் நேற்று காலையில் கரும்பு தோட்டத்திற்குள் சென்ற சின்னதம்பி யானை நேற்றுமாலை 5 மணிக்கு வெளியே வந்துவிட்டு மீண்டும் கரும்பு தோட்டத்திற்குள் சென்றுவிட்டது.

சின்னதம்பி யானையை பிடிப்பதற்காக பயன்படுத்தப்பட்டு வரும் கலீம் மற்றும் சுயம்பு என்ற 2 கும்கி யானைகளுக்கான பராமரிப்பு மற்றும் உணவுகளுக்கான செலவுகள் அதிகமாக இருப்பதாகவும் அவற்றை சமாளிக்க முடியாமல் வனத்துறை அதிகாரிகள் மற்றும் வனத்துறை காவலர்கள் திணறி வருவதாகவும் கூறப்படுகிறது.


Next Story