பட்டாசு தொழிலாளர்களுக்கு ஆதரவாக விருதுநகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்


பட்டாசு தொழிலாளர்களுக்கு ஆதரவாக விருதுநகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 Feb 2019 11:15 PM GMT (Updated: 12 Feb 2019 9:29 PM GMT)

பட்டாசு தொழிலாளர்களுக்கு ஆதரவாக விருதுநகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

விருதுநகர்,

தமிழகத்தின் மிக அதிக சார்பு தொழில்களில் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட நேரடி மற்றும் மறைமுக தொழிலாளர்களை கொண்ட பட்டாசு தொழில் கடந்த 120-நாட்களுக்கும் மேலாக முடங்கிக் கிடக்கிறது. இதனால் அந்த தொழிலாளர்கள் மட்டுமல்ல அவர்களின் குடும்பம் பாதிக்கப்பட்டு ஒருவேளை உணவுக்குக்கூட சிரமப்பட்டு வருகிறார்கள். தீபாவளி முடிந்த பிறகு தொழிற்சாலைகள் திறந்துவிடும் என்று கடன் வாங்கி பண்டிகையையும் குழந்தைகளின் படிப்புச்செலவுகளையும் சரிசெய்துவிட்ட நிலையில் தொழிற்சாலைகள் திறக்கப்படாததால் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாமலும் பட்டாசு தொழில் சார்ந்த தொழில் தவிர்த்து வேறேதும் தெரியாத இந்த மக்கள் வாடி வருகிறார்கள்.

சிவகாசியில் தொடர் போராட்டத்தை தொடங்கியுள்ள பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக விருதுநகர் பழைய பஸ்நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விருதுநகர் நகர செயலாளர் முருகன் தலைமையிலும் வடக்கு ஒன்றிய செயலாளர் முத்துவேல் தெற்கு ஒன்றிய செயலாளர் நேரு ஆகியோர் முன்னிலையிலும் இந்த போராட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பட்டாசு ஆலையை திறக்க உரிய நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் கலந்து கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் வெங்கட்ராமன் நிருபர்களிடம் கூறியதாவது:-

பட்டாசு தொழிலை பாதுகாக்க சுப்ரீம் கோர்ட்டில் மத்திய, மாநில அரசு உரிய முறையில் வாதிட வேண்டும். சட்டமன்றத்தில் தமிழக அரசு 110-விதியின் கீழ் ரூ.2 ஆயிரம் அறிவித்து உள்ள நிலையில் அந்த தொகை விவசாயிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் எந்தவொரு வகையிலும் உபயோகமாக இருக்காது. நிரந்தரமான வேலை வாய்ப்பு, வறட்சி ஏற்பட்ட மாவட்டங்களில் விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கொடுப்பது, 100 நாள் வேலை திட்டத்தை சரியான முறையில் செயல்படுத்துவது ஊதிய உயர்வு போன்ற அடிப்படை நடவடிக்கைகளில் தமிழக அரசு கவனம் செலுத்தவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story