மேலூர் அருகே கண்மாயில் மணல் அள்ளிய 4 பேர் கைது 3 லாரிகள், ஜே.சி.பி. எந்திரம் பறிமுதல்


மேலூர் அருகே கண்மாயில் மணல் அள்ளிய 4 பேர் கைது 3 லாரிகள், ஜே.சி.பி. எந்திரம் பறிமுதல்
x
தினத்தந்தி 12 Feb 2019 10:34 PM GMT (Updated: 12 Feb 2019 10:34 PM GMT)

மேலூர் அருகே கண்மாயில் மணல் அள்ளிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 3 லாரிகள், ஜே.சி.பி. எந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலூர்,

மேலூர் அருகே தும்பைசாலைக்கிபட்டியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பட்டவேலன்குளம் கண்மாய் உள்ளது. இந்த கண்மாயில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். மேலும் கண்மாயில் இரவு பகலாக ஜே.சி.பி. எந்திரம் மூலம் மணல் கடத்திச் செல்வதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணனுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து மணல் கடத்தல் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க மேலூர் போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார்.

அதன்படி மேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜேசு தலைமையிலான போலீசார் அதிரடியாக அப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது அனுமதியின்றி கண்மாயில் ஒரு கும்பல் ஜே.சி.பி. எந்திரத்தின் உதவியுடன் லாரிகளில் மணல் அள்ளிக் கொண்டிருந்தது. இதனை பார்த்த போலீசார் மணல் கடத்தல் கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர். மேலும் அங்கு மணல் அள்ளுவதற்காக நின்றிருந்த 3 லாரிகள், ஒரு ஜே.சி.பி. எந்திரம் பறிமுதல் செய்து, போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

இதனையடுத்து மணல் அள்ளிய நபர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் மேலூரை சேர்ந்த அப்துல்கலாம் (வயது 52), சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை சேர்ந்த பிரபாகரன் (31), கரையிப்பட்டியை சேர்ந்த ரவிச்சந்திரன் (57), சூரகுண்டுவை சேர்ந்த சந்திரசேகரன் (28) என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர். மேலும் வாகனங்களின் உரிமையாளர்கள் தெய்விநாயகம், இப்ராகிம், பக்ருதீன் ஆகியோர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story