ஆற்காடு அருகே வாலிபர் கழுத்தை அறுத்து கொலை 2 பேரை பிடித்து விசாரணை


ஆற்காடு அருகே வாலிபர் கழுத்தை அறுத்து கொலை 2 பேரை பிடித்து விசாரணை
x
தினத்தந்தி 13 Feb 2019 5:01 PM GMT (Updated: 13 Feb 2019 5:01 PM GMT)

ஆற்காடு அருகே வாலிபர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுதொடர்பாக போலீசார் 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆற்காடு, 

ஆற்காட்டை அடுத்த மேல்விஷாரம் நகரசபை அலுவலகம் அருகே உள்ள விவசாய நிலத்தில் வாலிபர் ஒருவர் கல்லால் தாக்கியும், கழுத்தை அறுத்தும் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக ரத்தினகிரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஆற்காடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி, ரத்தினகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது வாலிபரின் கழுத்து மற்றும் மார்பு என பல்வேறு இடங்களில் மதுபாட்டிலை உடைத்து கிழித்த காயங்களும் இருந்தன. அதைத் தொடர்ந்து வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில், கொலை செய்யப்பட்டு கிடந்தவர் வேலூர் சைதாப்பேட்டை கன்னி கோவில் தெருவை சேர்ந்த மதியழகன் என்பவரது மகன் தமிழரசன் (வயது 26) என்பது தெரியவந்தது.

மேலும் தமிழரசனை அவரது நண்பர்கள் நேற்று முன்தினம் இரவு ஓட்டலில் சாப்பிட அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. தமிழரசன் மீது வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு உள்பட 5 வழக்குகள் உள்ளன. இதற்கிடையில் சம்பவ இடத்தை ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

மேலும் வேலூரில் இருந்து மோப்ப நாய் ‘சிம்பா’ சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டது. அது அங்கிருந்து சிறிது தூரம் ஓடிச்சென்றது. ஆனால் யாரையும் ‘கவ்வி’ பிடிக்கவில்லை.

இந்த கொலை குறித்து ரத்தினகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story