மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் காயம் அடைந்த பள்ளி மாணவன் சாவு


மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் காயம் அடைந்த பள்ளி மாணவன் சாவு
x
தினத்தந்தி 12 Feb 2019 10:45 PM GMT (Updated: 13 Feb 2019 5:21 PM GMT)

ஆண்டிப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் படுகாயமடைந்த பள்ளி மாணவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தான். இதை தொடர்ந்து விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.

கண்டமனூர்,

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி பாலக்கோம்பை சாலையில் உள்ள பிச்சம்பட்டி அருகே கடந்த 11-ந் தேதி மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி கொண்டன. இதில் ராஜதானியை சேர்ந்த ஹரிஷ் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்தில் படுகாயமடைந்த நரேஷ்பாண்டி தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

மேலும் படுகாயமடைந்த முகிலன், பள்ளி மாணவன் அஜய் ஆகியோர் மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி அஜய் பரிதாபமாக இறந்தான். முகிலனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதன்மூலம் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது. விபத்தில் பலியான அஜயின் தந்தை கணேசன் மற்றும் குடும்பத்தினர் மத்திய பிரதேச மாநிலத்தில் முறுக்கு வியாபாரம் செய்து வருகின்றனர்.

இதனால் ராஜதானியில் உள்ள தனது தாத்தா வீட்டில் அஜய் தங்கி, அங்குள்ள அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான் என்பது குறிப்பிடத்தக்கது. விபத்தில் ராஜதானியில் ஹரிஷ், அஜய் ஆகிய 2 பேர் பலியானதால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது. 

Next Story