திருத்துறைப்பூண்டியில் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது


திருத்துறைப்பூண்டியில் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 13 Feb 2019 10:15 PM GMT (Updated: 13 Feb 2019 6:56 PM GMT)

திருத்துறைப்பூண்டியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய 4 பேரை வலைவீசி தேடிவருகின்றனர்.

திருத்துறைப்பூண்டி,

திருத்துறைப்பூண்டி போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணி புரிபவர் ரவிச்சந்திரன் (வயது 40). இவர் நேற்றுமுன்தினம் பணியில் இருந்தபோது திருத்துறைப்பூண்டி-வேதாரண்யம் சாலையில் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் தேங்கி நிற்பதாக போலீஸ் நிலையத்திற்கு தகவல் வந்தது. இதையடுத்து அங்கு பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவிச் சந்திரன் சம்பவ இடத்திற்கு சென்று போக்குவரத்தை சரி செய்தார். அப்போது நின்று கொண்டிருந்த மங்களநாயகி புரம் பாம்பாலம்மன் கோவில் தெருவை சேர்ந்த பூமிநாதன் மகன் பாக்கியராஜ் (21), அதே பகுதியை சேர்ந்த தண்டபாணி, ஸ்ரீதர், அண்ணாநகரை சேர்ந்த ராம்கி, அஜீத் ஆகிய 5 பேரும் சேர்த்து ரவிச் சந்திரனை தாக்கி அவருக்கு கொலைமிரட்டல் விடுத்துள்ளனர். இதில் காயமடைந்த அவர் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து அவர் திருத் துறைப்பூண்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகரன், இன்ஸ்பெக்டர் ஆனந்தபத்மநாபன், சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து பாக்கியராஜை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். மேலும் இதில் தொடர்புடைய 4 பேரை வலை வீசி தேடி வருகின்றனர்.

Next Story