திருச்சி அருகே சினிமா போல சம்பவம்: மாற்றுத்திறனாளி பெண்ணை காரில் கடத்தியவரை விரட்டிப்பிடித்த பொதுமக்கள்


திருச்சி அருகே சினிமா போல சம்பவம்: மாற்றுத்திறனாளி பெண்ணை காரில் கடத்தியவரை விரட்டிப்பிடித்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 13 Feb 2019 11:15 PM GMT (Updated: 13 Feb 2019 7:39 PM GMT)

திருச்சி வையம்பட்டி அருகே மாற்றுத் திறனாளி பெண்ணை காரில் கடத்தியவரை பொதுமக்கள் விரட்டிப்பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

வையம்பட்டி,

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 25 வயதுடைய மாற்றுத்திறனாளி பெண் ஒருவர், நேற்று காலை திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை அருகே ஒரு பள்ளியின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக காரில் வந்த ஒரு நபர், அந்த பெண்ணை பிடித்து காரில் தூக்கிப் போட்டு கடத்தி சென்றார்.அங்கு நின்றிருந்தவர்கள் இதை கவனித்து அந்த காரை மோட்டார் சைக்கிள்களில் விரட்டி சென்றனர். ஆனால், அந்த நபர் கிராம சாலைகளில் காரை வேகமாக ஓட்டினார். பின்னர் அவர், திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையை அடைந்து அங்குள்ள சுங்கச்சாவடி வழியாக செல்ல முயன்ற போது அவரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர்.

அவரிடம் விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தார். இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் அந்த நபருக்கு தர்ம அடி கொடுத்து வையம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வர காலதாமதமானதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து வையம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் அனுஷா மனோகரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டனர். பின்னர் மாற்றுத்திறனாளி பெண்ணை கடத்திய நபரை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.அங்கு வைத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் திருச்சி தென்னூரை சேர்ந்த இஸ்மாயில் (வயது 42) என்பதும், திண்டுக்கல்லில் திருமணம் செய்திருப்பதும் தெரிய வந்தது. அவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொள்ளை, வழிப்பறி வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது. இஸ்மாயில் எதற்காக மாற்றுத் திறனாளி பெண்ணை காரில் கடத்திச் சென்றார்? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மாற்றுத்திறனாளி பெண்ணை காரில் கடத்திய தகவல் அறிந்ததும் பொதுமக்கள் பலர் தங்களது மோட்டார் சைக்கிள்களில் அந்த காரை விரட்டி சென்றனர். முதலில் அந்த கார் கிராமப்புறங்களிலும் பின்னர் தேசிய நெடுஞ்சாலையிலும் படுவேகமாக சென்றது. இருந்தாலும் மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் அந்த காரை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். இந்த சம்பவம் சினிமாவில் நடப்பது போன்று இருந்தது.

மாற்றுத்திறனாளி பெண்ணை காரில் கடத்தி சென்றவர் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதால் அவரை வெளியே நடமாட முடியாத வகையில் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர். 

Next Story