40 ஆயிரம் பேர் மாதிரி எந்திரத்தில் ஓட்டு போட்டனர் வாக்களித்ததை உறுதி செய்யும் கருவியை பார்வையிட்டனர்


40 ஆயிரம் பேர் மாதிரி எந்திரத்தில் ஓட்டு போட்டனர் வாக்களித்ததை உறுதி செய்யும் கருவியை பார்வையிட்டனர்
x
தினத்தந்தி 13 Feb 2019 10:30 PM GMT (Updated: 13 Feb 2019 9:32 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் 40 ஆயிரம் பேர் மாதிரி வாக்குப்பதிவு எந்திரத்தில் ஓட்டுபோட்டு, வாக்களித்ததை உறுதி செய்யும் கருவியை பார்வையிட்டனர்.

ஈரோடு,

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன. ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் மாதிரி வாக்குப்பதிவு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. மாவட்டம் முழுவதும் 36 வாகனங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு செல்லப்பட்டு வாக்காளர்கள் மாதிரி வாக்குப்பதிவு செய்ய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

மாதிரி வாக்குப்பதிவு எந்திரத்துடன் வாக்காளர்கள் தாங்கள் விரும்பிய சின்னத்துக்கு வாக்களித்ததை உறுதி செய்யும் வகையில் பொருத்தப்பட்டு இருக்கும் ‘விவிபேட்’ என்ற கருவியும் இணைக்கப்பட்டு இருந்தது. வாக்காளர்கள் தாங்கள் விரும்பிய சின்னத்துக்கு நேராக இருக்கும் பொத்தானை அழுத்தி ஓட்டு போட்டதும், ‘விவிபேட்’ கருவியின் உள்ளே காகிதத்தில் இந்த சின்னம் பதிவாகி 7 வினாடிகள் வாக்காளருக்கு தெரியும். பின்னர் அந்த சின்னம் பதிந்த காகித சீட்டு உள்ளேயே பத்திரமாக இருக்கும்.

இந்த நவீன வாக்குப்பதிவு கருவியை வாக்காளர்கள் பார்வையிட்டு, அதுபற்றி ஊழியர்களிடம் கேட்டு அறிந்தார்கள்.

இதுபற்றி தேர்தல் பிரிவு தாசில்தார் ரவிச்சந்திரன் கூறும்போது, ‘ஈரோடு மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் 8 தொகுதிகளிலும் வாகனங்கள் மூலம் மாதிரி வாக்குப்பதிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி தொடர்ச்சியாக நடந்து வருகிறது. மலைக்கிராமங்களிலும் இது நடந்து வருகிறது. இதுவரை சுமார் 40 ஆயிரம் பேர் மாதிரி வாக்குப்பதிவு செய்து இருக்கிறார்கள். இது வாக்காளர்கள் உற்சாகமாக வாக்குச்சாவடிக்கு வந்து தங்கள் வாக்குகளை முறையாக செலுத்த ஆர்வம் அளிப்பதாக இருக்கும்’ என்றார்.


Next Story