கவர்னரின் செயல்பாடுகளால், மக்கள் மத்தியில் கொந்தளிப்பு நாராயணசாமி பேட்டி


கவர்னரின் செயல்பாடுகளால், மக்கள் மத்தியில் கொந்தளிப்பு நாராயணசாமி பேட்டி
x
தினத்தந்தி 13 Feb 2019 11:30 PM GMT (Updated: 13 Feb 2019 9:57 PM GMT)

கவர்னரின் செயல்பாடுகளால் புதுவை மாநில மக்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி,

கவர்னர் மாளிகை முன்பு போராட்டம் நடத்திய முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த 2½ ஆண்டுகளாக கவர்னர் கிரண்பெடி புதுவை மாநில வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக செயல்பட்டு வருகிறார். அதை மக்கள் மத்தியில் கொண்டு செல்லத்தான் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். புதுவையில் படிப்படியாக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி ஹெல்மெட் அணிய செய்ய வேண்டும் என்று சாலை பாதுகாப்பு வார விழாவில் கூறினேன். அதன்படி காவல்துறை, போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

ஆனால் கவர்னர் தெருவில் இறங்கி வாகனங்களில் செல்லும் பொதுமக்களை பிடித்து, இழுத்து வரம்பு மீறி நடந்து கொண்டார். இது பொதுமக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. கவர்னர் இதுபோன்று செயல்படுவது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல.

அனைவருக்கும் இலவச அரிசி வழங்க கோப்பு அனுப்பினால் அதற்கு அனுமதி கொடுக்காமல் வேண்டுமென்றே திருப்பி அனுப்புகிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முடிவை துச்சமாக மதித்து சர்வாதிகார அடிப்படையில் செயல்படுகிறார். காவல்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வயது வரம்பு தளர்வு கேட்டு கோப்பு அனுப்பினோம். அதற்கு ஒப்புதல் தராமல் திருப்பி அனுப்பியுள்ளார். இதனால் கடந்த 1 வருடமாக காவல்துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது.

அதேபோல் அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க கோப்பு அனுப்பினால் அதற்கும் ஒப்புதல் தரவில்லை. பொங்கல், தீபாவளி பண்டிகைக்கு இலவச பொருட்கள் வழங்க முட்டுக்கட்டையாக உள்ளார். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வேட்டி சேலை வழங்குவதையும் தடுக்கிறார். பாசிக், பாப்ஸ்கோ நிறுவனங்களுக்கு மானியம் தர மறுக்கிறார்.

ஏனாம் பகுதிக்கு ரூ.136 கோடி திட்டத்திற்கு மத்திய அரசு நிதி தர வேண்டியதை தடுத்து நிறுத்துகிறார். மக்கள் நலத்திட்டங்களுக்கு தொடர்ச்சியாக முட்டுக்கட்டை போட்டு வருகிறார். அரசு நிதிஉதவி பெறும் பள்ளிகளுக்கு 95 சதவீத நிதி உதவி அளிக்கக்கூடாது என்று அதை நிறுத்த உத்தரவு போடுகிறார். இது போன்று 39 மக்கள் பிரச்சினைகள் தொடர்பாக கடந்த 7-ந் தேதி கவர்னருக்கு கடிதம் அனுப்பினேன். சர்வாதிகாரி போல் நடந்து கொண்டு தன்னிச்சையாக உத்தரவுகளை போட்டு அதிகாரிகளை மிரட்டி வருகிறார். அவர் கவர்னராக இருக்க தகுதி அற்றவர். அராஜகம், அதிகார துஷ்பிரயோகத்தால் புதுச்சேரி மக்களை மிரட்டி வருகிறார். இதை கண்டித்து அமைதியான முறையில் நாங்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். அவர் புதுவை தேர்தல் களத்தில் வேண்டுமென்றால் நின்று பார்க்கட்டும். அவரை மக்கள் விரட்டியடிப்பார்கள். அவர் புதுவை மக்களுக்காக செயல்படவில்லை. மக்கள் நல திட்டங்களுக்கு அனுமதி அளிப்பதும் இல்லை. வெறும் விளம்பரத்திற்காக மட்டுமே செயல்படுகிறார். தனக்கும், கவர்னர் மாளிகை ஊழியர்களுக்கும் சம்பளம் போட்டுக்கொள்கிறார். ஆனால் பிற அரசுசார்பு நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம் போட அனுமதி மறுப்பது ஏன்?

எம்.எல்.ஏ.க்களுக்கு உரிய மரியாதையை அவர் கொடுப்பது இல்லை. கடந்த 2½ ஆண்டுகளில் அவர் புதுவை மக்களுக்காக என்ன செய்தார். மத்திய அரசிடம் இருந்து ஒரு பைசாகூட நிதி பெற்றுத்தரவில்லை. மாநில அரசின் நிதியில் செயல்படுத்தப்படும் திட்டங்களையும் தடுத்து நிறுத்துகிறார். பிரதமர் மோடியின் ஏஜெண்டாக அவர் செயல்படுகிறார். என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமியும் அவர்களுடன் சேர்ந்துள்ளார். மோடி, கிரண்பெடி, ரங்கசாமி ஆகியோர் கூட்டு சதி செய்து புதுவை மக்கள், மாநில வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story