தூத்துக்குடியில் புதிய தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்


தூத்துக்குடியில் புதிய தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 13 Feb 2019 10:30 PM GMT (Updated: 13 Feb 2019 10:09 PM GMT)

தூத்துக்குடியில் புதிய தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சியை கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சங்கத்தில்(துடிசியா) புதிய தொழில் முனைவோருக்கான மேம்பாட்டு பயிற்சி தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி பயிற்சியை தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் மூலம் தொழில் முனைவோர்களுக்கு பல்வேறு கட்டங்களாக பயிற்சிகள் வழங்கப்படுகிறது. மேலும், புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன வளர்ச்சி திட்டத்தின்கீழ் தகுதியான நபர்களுக்கு ரூ.30 லட்சம் மானியத்துடன் ரூ.5 கோடி வரை கடன் உதவிகள் வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டத்தைச் சேர்ந்த 45 பேருக்கு தொழில் தொடங்குவது மற்றும் வருவாய் ஈட்டுவது தொடர்பான அனைத்து பயிற்சிகளும் 15 நாட்கள் அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சியில் மாவட்ட தொழில் மையம் அலுவலர்கள், சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனத்தை சேர்ந்த அலுவலர்கள், முன்னோடி வங்கி அலுவலர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டு பயிற்சி அளிக்க உள்ளார்கள். நீங்கள் வெற்றிகரமான தொழில்முனைவோராக மாற இந்த பயிற்சி வாய்ப்பாக இருக்கும். இங்கு உள்ள ஒவ்வொருவரும் ஆரம்பத்தில் கடன் உதவி பெற்று கஷ்டப்பட்டு முன்னேறி உள்ளனர். அவர்களின் அனுபவங்களை நீங்கள் அறிந்து கொள்வதன் மூலம் எளிதில் முன்னேறலாம். ஆகையால் இந்த பயிற்சியை நல்ல முறையில் பயன்படுத்திக்கொண்டு புதிய தொழில் தொடங்கி வாழ்வில் வெற்றி பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து 5 பயனாளிகளுக்கு கடன் உதவிகள் பெறுவதற்கான ஆணையை கலெக்டர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட தொழில் மையம் துணை மேலாளர் சொர்ணலதா, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை உதவி இயக்குநர் ஜெரினா பப்பி, மாவட்ட முன்னோடி வங்கி துணை மேலாளர் விஜயகுமார், துடிசியா தலைவர் நேருபிரகாஷ், செயலாளர் ராஜ்செல்வின், பொருளாளர் சந்திரமோகன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

Next Story