சந்திரபாபு நாயுடுவுடன் நடந்த சந்திப்பை ‘வானம் இடிந்து விழுந்தது போல பார்க்கிறார்கள்’ பா.ஜனதா மீது சிவசேனா பாய்ச்சல்


சந்திரபாபு நாயுடுவுடன் நடந்த சந்திப்பை ‘வானம் இடிந்து விழுந்தது போல பார்க்கிறார்கள்’ பா.ஜனதா மீது சிவசேனா பாய்ச்சல்
x
தினத்தந்தி 13 Feb 2019 11:30 PM GMT (Updated: 13 Feb 2019 10:41 PM GMT)

சந்திரபாபு நாயுடுவுடன் நடந்த சந்திப்பை வானம் இடிந்து விழுந்ததை போல பார்ப்பதாக பா.ஜனதா மீது சிவசேனா குற்றம்சாட்டி உள்ளது.

மும்பை,

சந்திரபாபு நாயுடுவுடன் நடந்த சந்திப்பை வானம் இடிந்து விழுந்ததை போல பார்ப்பதாக பா.ஜனதா மீது சிவசேனா குற்றம்சாட்டி உள்ளது.

சந்திப்பு

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி அந்த மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கடந்த திங்கட்கிழமை டெல்லியில் உண்ணாவிரதம் இருந்தபோது, அவரை சிவசேனா மூத்த தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். நாடாளுமன்ற தேர்தலையொட்டி சந்திரபாபு நாயுடு எதிர்க்கட்சிகள் அணியில் இணைந்து செயல்பட்டு வரும் நிலையில், அவரை பா.ஜனதா கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் சிவசேனா தலைவர் ஒருவர் சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் சிவசேனா கட்சி பத்திரிகையான சாம்னாவில் இதுபற்றி கருத்து தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

வானம் இடிந்ததை போல...

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் வரை சந்திரபாபு நாயுடுவை பெரிய தலைவராக பா.ஜனதா பார்த்தது. ஆனால் திடீரென அவர் தீண்டத்தகாதவராக பார்க்கப்படுகிறார்.

ஆந்திர பிரதேசம் 2 மாநிலமாக பிரிக்கப்பட்டது. இவ்வாறு மாநில பிரிவினைக்கு சிவசேனா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கிறது. தற்போது ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு போராடும் சந்திரபாபு நாயுடுவை சந்தித்தது மரியாதை நிமித்தமானது தான். ஆனால் அரசு மீது வானம் இடிந்து விழுந்ததை போல பார்க்கிறார்கள்.

தேர்தலுக்கு பிறகு ஆட்சியமைக்க எண்ணிக்கையில் வெட்டு விழுந்தால் அப்போது சந்திரபாபு நாயுடுவின் வீட்டு கதவை பா.ஜனதாவினர் தட்ட மாட்டார்கள் என்பதில் என்ன உறுதி இருக்கிறது.

இவ்வாறு சிவசேனா கூறியுள்ளது.

Next Story