நெல்லை அருகே வேன் மோதி பள்ளிக்கூட மாணவன் பலி சாலையை கடக்க முயன்ற போது பரிதாபம்


நெல்லை அருகே வேன் மோதி பள்ளிக்கூட மாணவன் பலி சாலையை கடக்க முயன்ற போது பரிதாபம்
x
தினத்தந்தி 13 Feb 2019 10:45 PM GMT (Updated: 13 Feb 2019 11:07 PM GMT)

நெல்லை அருகே வேன் மோதி பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான். சாலையை கடக்க முயன்ற போது இந்த பரிதாப சம்பவம் நடந்தது.

நெல்லை,

நெல்லை அருகே உள்ள தாழையூத்து காமராஜர் நகர் வடக்கு தெருவை சேர்ந்தவர் முத்துராமன். கூலி தொழிலாளி. இவருடைய மகன் முத்து செல்வம் (வயது 12). இவன், சங்கர்நகர் பகுதியில் ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று காலை வழக்கம் போல் வீட்டில் இருந்து சைக்கிளில் பள்ளிக்கூடத்துக்கு புறப்பட்டான்.

அந்த பகுதியில் உள்ள நான்கு வழிச்சாலையை கடக்க முயன்றான். அப்போது தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் இருந்து வந்த வேன், அவன் மீது மோதியது. இதில் முத்துசெல்வம் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தான். ரத்த வெள்ளத்தில் மிதந்த முத்துசெல்வத்தை அப்பகுதியில் நின்று கொண்டு இருந்தவர்கள் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே முத்துசெல்வம் பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து தாழையூத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். வேனை ஓட்டி வந்த கயத்தாறு அருகே உள்ள வடக்கு சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த டிரைவர் சேர்மத்துரை என்பவரை போலீசார் கைது செய்தனர்.வேன் மோதி பள்ளிக்கூட மாணவன் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 


Next Story