விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் ரூ.40 லட்சத்தில் சுற்றுச்சுவர் கட்டும்பணி கலெக்டர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்


விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் ரூ.40 லட்சத்தில் சுற்றுச்சுவர் கட்டும்பணி கலெக்டர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 14 Feb 2019 10:15 PM GMT (Updated: 14 Feb 2019 6:22 PM GMT)

விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் ரூ.40 லட்சத்தில் சுற்றுச்சுவர் கட்டும் பணியை கலெக்டர் சுப்பிரமணியன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

விழுப்புரம், 

விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் கலெக்டர் அலுவலகம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், டி.ஐ.ஜி. அலுவலகம், கோட்டாட்சியர், தாசில்தார், வனத்துறை, கருவூலம், முதன்மை கல்வி அலுவலகம், இந்து சமய அறநிலையத்துறை, கூட்டுறவு சங்க மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலகங்கள் அமைந்துள்ளன.

இந்த பெருந்திட்ட வளாகத்தை சுற்றி பாதுகாப்பு நலன் கருதி சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் பெருந்திட்ட வளாகத்தில் சுற்றுச்சுவர் அமைக்க கலெக்டர் சுப்பிரமணியன், வளர்ச்சி நிதியில் இருந்து ரூ.40 லட்சத்தை ஒதுக்கீடு செய்தார். மொத்தம் 450 மீட்டர் தூரத்திற்கு இந்த சுற்றுச்சுவர் அமைக்கப்பட உள்ளது.

இதற்கான கட்டுமான பணியை நேற்று காலை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, பொதுப் பணித்துறை செயற்பொறியாளர் தனபால் உள்பட பலர் உடனிருந்தனர்.

Next Story