கிணற்றில் தவறி விழுந்து பெண் சாவு மின் மோட்டாரை மேலே தூக்கிய போது பரிதாபம்


கிணற்றில் தவறி விழுந்து பெண் சாவு மின் மோட்டாரை மேலே தூக்கிய போது பரிதாபம்
x
தினத்தந்தி 14 Feb 2019 11:00 PM GMT (Updated: 14 Feb 2019 9:02 PM GMT)

கடத்தூர் அருகே மின் மோட்டாரை மேலே தூக்கிய போது கிணற்றில் தவறி விழுந்து பெண் பரிதாபமாக இறந்தார்.

கடத்தூர்,

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே உள்ள சுங்கரஅள்ளியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். லாரி டிரைவர். இவருடைய மனைவி கல்பனா (வயது31). இவர்களுக்கு கவுதமன், விமல் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். ராமச்சந்திரன் லாரிக்கு சென்று விட்டார். இதனிடையே அவர்களது விவசாய கிணற்றில் இருந்த மின் மோட்டார் பழுதடைந்தது. இதனால் நேற்று கல்பனா தனது உறவினர்கள் உதவியுடன் 110 அடி ஆழ கிணற்றில் இருந்து மின் மோட்டாரை மேலே தூக்கும் பணியில் ஈடுபட்டார்.

அப்போது மின்மோட்டாரில் கட்டப்பட்டு இருந்த கயிறு திடீரென அறுந்து விட்டது. இதில் கல்பனாவின் காலில் கயிறு மாட்டிக்கொண்டதால் நிலைதடுமாறி கிணற்றில் தவறி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் கிணற்றில் இறங்கி பார்த்த போது கல்பனா இறந்து விட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள், கல்பனாவின் உடலை மேலே கொண்டு வந்தனர்.

இதுகுறித்து கடத்தூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த கல்பனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிணற்றில் தவறி விழுந்து பெண் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story