சோழவந்தான் அருகே பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் நகை பறிப்பு


சோழவந்தான் அருகே பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் நகை பறிப்பு
x
தினத்தந்தி 14 Feb 2019 10:30 PM GMT (Updated: 14 Feb 2019 9:55 PM GMT)

சோழவந்தான் அருகே பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் 7 பவுன் நகையை பறித்துச் சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

சோழவந்தான், 

மதுரை பைபாஸ் ரோடு பகுதியில் வசித்து வருபவர் மணிமாறன். இவருடைய மனைவி ராஜலட்சுமி (வயது 50). இவர் சோழவந்தான் அருகே வைத்தான் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். ராஜலட்சுமி நேற்று வழக்கம்போல் பள்ளிக்கு வருகை புரிந்து, மாணவ-மாணவிகளுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து 3 நபர்கள் பள்ளிக்கு வந்தனர். அவர்களில் ஒருவர் மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி பள்ளிக்குள் நுழைந்தார். பின்னர் அவர் பாடம் நடத்திக் கொண்டிருந்த தலைமை ஆசிரியை ராஜலட்சுமியிடம் முகவரி கேட்டுள்ளார். அந்த வேளையில் திடீரென்று அந்த நபர் ராஜலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் நகையை பறித்தார். இதனால் சுதாரித்துக் கொண்ட அவர் நகையை பிடித்துக்கொண்டு கத்தி கூக்குரலிட்டார். இருப்பினும் அந்த நபர் நகையை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பியோடிவிட்டார்.

முன்னதாக ஆசிரியையின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தை சேர்ந்தவர்கள் தப்பியோடிய நபர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் அந்த ஆசாமிகள் மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பினர். பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் நகை பறித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ராஜலட்சுமி விக்கிரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறிப்பில் ஈடுபட்ட நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story