சென்னை வளசரவாக்கத்தில் சினிமா நடிகர் காரில் கடத்தல்?


சென்னை வளசரவாக்கத்தில் சினிமா நடிகர் காரில் கடத்தல்?
x
தினத்தந்தி 15 Feb 2019 11:15 PM GMT (Updated: 15 Feb 2019 8:26 PM GMT)

சென்னை வளசரவாக்கத்தில் சினிமா நடிகர், காரில் கடத்தப்பட்டதாக வந்த தகவலால் பரபரப்பு ஏற்பட்டது.

பூந்தமல்லி, 

சென்னை வளசரவாக்கம், பாலாஜி நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திர பாண்டியன். இவருடைய மகன் சரவணகுமார் என்ற அபி சரவணன் (வயது 32). சினிமா நடிகரான இவர், ‘பட்டதாரி’, ‘கேரள நாட்டிளம் பெண்களுடனே’ என்பது உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்து உள்ளார்.

நேற்று முன்தினம் இரவு போலீஸ் கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்ட ராஜேந்திர பாண்டியன், தனது மகன் சரவணகுமாரை, சிலர் காரில் கடத்திச் சென்று விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து வளசரவாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக வளசரவாக்கம் உதவி கமிஷனர் சம்பத் தலைமையிலான போலீசார், நடிகர் சரவணகுமார் வீட்டுக்கு சென்று, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

இதற்கிடையில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட நடிகர் சரவணகுமார், சிறிது நேரத்தில் காரில் மீண்டும் தனது வீட்டுக்கு திரும்பி வந்தார். இதுபற்றி சரவணகுமாரிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர், தன்னை யாரும் கடத்தவில்லை என்று கூறினார். எனினும் அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். பின்னர் இது தொடர்பாக போலீசார் கூறியதாவது:-

நடிகர் சரவணகுமார், ‘பட்டதாரி’ என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கும்போது அதே படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை அதிதி மேனனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதற்கிடையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர்.

அதிதி மேனன், தன்னை ஏமாற்றி விட்டதாக சரவணகுமார், மதுரை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளதாக தெரிகிறது. அந்த வழக்கில் அவரது நண்பர்களின் பெயர்களையும் சரவணகுமார் சேர்த்து விட்டதாகவும், தங்களது பெயர்களை எதற்கு சேர்த்தாய்? என்று கேட்பதற்காக அவரது நண்பர்கள் வீட்டுக்கு வந்து உள்ளனர்.

இதனால் வேறு இடத்தில் வைத்து பேசலாம் என்று கூறி நண்பர்களுடன் காரில் ஏறி சென்றதாகவும், போகும்போது பெற்றோரிடம் கூறாமலும், செல்போனை எடுக்காமலும் சென்றுவிட்டதால் சரவணகுமார் கடத்தப்பட்டதாக அவரது தந்தை போலீசாருக்கு தகவல் கொடுத்து உள்ளார் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. எனினும் இது தொடர்பாக தொடர்ந்து விசாரித்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story