திருப்பூரில் 500 அரங்குகளுடன் நிட்டெக் பின்னலாடை எந்திர கண்காட்சி: 1-ந் தேதி தொடங்குகிறது


திருப்பூரில் 500 அரங்குகளுடன் நிட்டெக் பின்னலாடை எந்திர கண்காட்சி: 1-ந் தேதி தொடங்குகிறது
x
தினத்தந்தி 15 Feb 2019 11:04 PM GMT (Updated: 16 Feb 2019 12:20 AM GMT)

திருப்பூரில் 500 அரங்குகளுடன் நிட்டெக் பின்னலாடை எந்திர கண்காட்சி வருகிற 1-ந் தேதி தொடங்குகிறது.

திருப்பூர்,

ஹைடெக் இண்டர்நேஷனல் டிரேடு பேர் இந்தியா பிரைவேட் நிறுவனத்தின் தலைவர் ராயப்பன், திருப்பூர் பூண்டி ரிங் ரோட்டில் உள்ள நிட்டெக் கண்காட்சி வளாகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திருப்பூர் திருமுருகன்பூண்டி ரிங் ரோட்டில் உள்ள நிட்டெக் கண்காட்சி வளாகத்தில் அடுத்த மாதம் (மார்ச்) 1-ந் தேதி முதல் 4-ந் தேதி வரை நிட்டெக்-2019 என்ற பெயரில் பின்னலாடை எந்திர மற்றும் தொழில்நுட்ப கண்காட்சி காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. திருப்பூர் தொழில்துறையினர் வருகிற 2022-ம் ஆண்டு ரூ.1 லட்சம் கோடியை வர்த்தக இலக்காக நிர்ணயம் செய்துள்ளனர். இதனை எட்டுவதற்கு இந்த கண்காட்சி முக்கிய பங்கு வகிக்கும்.

இதில் நிட்டிங், லேப் டெஸ்டிங், காம்பேக்டிங் என பல்வேறு புதிய எந்திரங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 500 பேர் அரங்குகள் அமைக்க உள்ளனர். இதற்காக 2 லட்சத்து 50 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் குளிரூட்டப்பட்ட அரங்குகள் அமைய உள்ளது. இந்த கண்காட்சியில் 40 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் எனவும், இதில் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த 2 ஆயிரம் பேர் பங்கு பெறுவார்கள் எனவும் எதிர்பார்த்துள்ளோம்.

இந்த கண்காட்சி தொடர்பாக லூதியானா, கொல்கத்தா, அகமதாபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விளம்பரம் செய்து வந்தோம். இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது. இந்த கண்காட்சியில் சீனாவை சேர்ந்த 22 தொழில்துறையினர் முதல் முறையாக தாங்கள் தயாரித்த எந்திரங்களை அறிமுகப்படுத்த உள்ளனர். இந்த கண்காட்சிக்கு வருகிற தொழில்துறையினர் தங்களுக்கு தேவையான எந்திரங்களை ரூ.3 லட்சம் முதல் ரூ.1½ கோடி வரை வாங்கி செல்லலாம்.

ஹாங்காங்கை சேர்ந்தவர்கள் டையிங் எந்திரங்களை பார்வைக்காக வைக்கிறார்கள். இத்தாலியை சேர்ந்த நிறுவனம் பின்னலாடை மற்றும் காடாத்துணி 2 ஐயும் வாஷிங் செய்யக்கூடிய ஒரே எந்திரத்தை காட்சிப்படுத்துகின்றனர். கண்காட்சியில் கலந்துகொள்ள வருகிறவர்களின் வாகனங்களை நிறுத்த பார்க்கிங் வசதி மற்றும் தீயணைப்பு வாகனங்கள், மருத்துவ பரிசோதனை, சுகாதார வளாகம், சர்வதேச தரத்தில் உணவு கூடங்கள் என்பது உள்பட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

இதுபோல் கண்காட்சி நடைபெறும் 4 நாட்களும் திருமுருகன்பூண்டி, திருப்பூர் மற்றும் ஈரோடு, கரூர், சேலம் பகுதிகளில் இருந்து இலவச பஸ் வசதியும் செய்துகொடுக்கப்பட்டுள்ளது. எத்தியோப்பியாவில் உள்ள வர்த்தக வாய்ப்புகள் குறித்து தெரிந்துகொள்ளும் வகையில் 2-ந் தேதி காலை 11 மணிக்கு கருத்தரங்கம் நடைபெறுகிறது. மேலும், 4 நாட்களும் மாலை 3 மணிக்கு தொழில்துறையினர் உற்பத்தி செலவுகளை குறைக்க மற்றும் நவீன வடிவிலான ஆடைகள் குறித்து தெரிவிக்க கருத்தரங்கம் நடக்கிறது.

இந்த கண்காட்சியில் ரூ.500 கோடி வர்த்தக விசாரணை நடைபெறும் என எதிர்பார்த்துள்ளோம். திருப்பூர் ஏற்றுமதியை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதற்காக, 20 நாடுகளை சேர்ந்த தொழில்துறையினரை இலவசமாக அரங்குகள் அமைக்க அழைப்பு விடுத்துள்ளோம். திருப்பூர் தொழில்துறையினர் அவர்களிடம் ஆலோசனைகளை பெறலாம். இந்த கண்காட்சி வெள்ளிவிழா கண்காட்சியாக நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே திருப்பூர் தொழில்துறையினர் இந்த கண்காட்சியை பயன்படுத்திக்கொண்டு தங்களது வர்த்தகத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். இதில் ஹைடெக் இண்டர்நேஷனல் டிரேடு பேர் இந்தியா நிறுவனத்தின் இயக்குனர்கள் சிபி சக்கரவர்த்தி, ராதாகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் கென்னடி, ஹரீஷ்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story