தஞ்சையில் அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் இன்சூரன்ஸ் கட்டண உயர்வை ரத்து செய்ய கோரிக்கை


தஞ்சையில் அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் இன்சூரன்ஸ் கட்டண உயர்வை ரத்து செய்ய கோரிக்கை
x
தினத்தந்தி 16 Feb 2019 11:00 PM GMT (Updated: 16 Feb 2019 5:20 PM GMT)

இன்சூரன்ஸ் கட்டண உயர்வை ரத்து செய்ய கோரி தஞ்சையில் அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு அனைத்து ஆட்டோ சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்றுகாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு தொ.மு.ச. நிர்வாகி முருகானந்தம் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ. மாநில செயலாளர் ஜெயபால், கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில், மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க. அரசு, வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் தொகையை கடந்த 2012–ம் ஆண்டு ரூ.1,600 நிர்ணயம் செய்தது. 2014–ம் ஆண்டு ரூ.3,374–ஆக உயர்த்தியது. நடப்பு ஆண்டில்(2019–ம் ஆண்டு) ரூ.8,400 முதல் ரூ.10 ஆயிரத்து 500 வரை உயர்த்தியுள்ளது. உயர்த்தப்பட்ட இன்சூரன்ஸ் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்.


நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வருவதால் மிகவும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். தினந்தோறும் விலையை நிர்ணயம் செய்யும் முடிவை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகி குமரேசன், தே.மு.தி.க. நிர்வாகி நாகராஜன், மக்கள் அதிகாரம் அமைப்பின் நிர்வாகி தேவா, சி.ஐ.டி.யூ. மாநகர செயலாளர் சுரேஷ், மாவட்ட துணைச் செயலாளர் அன்பு, தரைக்கடை வியாபாரிகள் சங்க மாவட்ட பொருளாளர் ராஜா, விடுதலை சிறுத்தைகள் தொழிலாளர் சங்க நிர்வாகி கணபதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story