திருவாரூர் மாவட்டத்தில், நடப்பு பருவத்தில் இதுவரை 3 லட்சத்து 12 ஆயிரம் டன் நெல் கொள்முதல்


திருவாரூர் மாவட்டத்தில், நடப்பு பருவத்தில் இதுவரை 3 லட்சத்து 12 ஆயிரம் டன் நெல் கொள்முதல்
x
தினத்தந்தி 16 Feb 2019 11:00 PM GMT (Updated: 16 Feb 2019 7:09 PM GMT)

திருவாரூர் மாவட்டத்தில் நடப்பு பருவத்தில் இதுவரை 3 லட்சத்து 12 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. நெல்லுக்கான தொகையை காலதாமதமின்றி உடனடியாக வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 49 ஆயிரத்து எக்டேர் பரப்பில் சம்பா சாகுபடி நடைபெற்றுள்ளது. தற்போது சம்பா அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆள் பற்றாக்குறை, அறுவடை கூலி போன்ற பல காரணங்களால் வேளாண் பொறியியல் துறை மற்றும் தனியார் அறுவடை எந்திரங்கள் மூலம் அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது.

இதனையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் 441 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளாக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் உள்ள நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு சொந்தமான கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்பட்டு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் திருவாரூர் அருகே உள்ள கிடாரங் கொண்டான் திறந்தவெளி கொள்முதல் நிலையத்தில் 9 ஆயிரத்து 500 டன் நெல் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

இது போன்ற கிடங்குகளில் இருந்து நெல் மூட்டைகள் அரவைக்காக மாவட்டத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரிசி ஆலைக்கு அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இங்கு அரவை செய்யப்பட்ட நெல் மூட்டைகள், பொதுவினியோக திட்டத்திற்கு அரிசியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் நடப்பு பருவத்தில் 5 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் குறுவை சாகுபடியில் 50 ஆயிரம் டன்னும், சம்பா பருவத்தில் 2 லட்சத்து 62 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் நடப்பு பருவத்தில் இதுவரை 3 லட்சத்து 12 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், சம்பா அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. கஜா புயலால் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளதால், அதற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதலில் அளவீடு வைக்காமல் விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை முழுமையாக கொள்முதல் செய்ய வேண்டும். கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கான தொகையை காலம் கடத்தாமல் உடனடியாக வழங்க வேண்டும். அப்போதுதான் விவசாயிகளுக்கு பயன் தரும்.

கொள்முதலில் முறைகேடுகளை களைவதற்காகத்தான் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கும் நடைமுறை அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் மூட்டைக்கு என ஒரு தொகை பிடித்தம் செய்யப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. எனவே முன்பு இருந்ததுபோல் நெல்லுக்கான தொகையை நேரடியாக விவசாயிகளுக்கு வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும்.

வங்கி கணக்கில் வரவு வைப்பதில் ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்க முடியும். இதுபோன்ற குளறுபடிகளை கலைந்து நெல் கொள்முதல் செய்தால் விவசாயிகளுக்கு பயன் அளிக்கும் என தெரிவித்தனர்.

Next Story