பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நதி நீர் வரத்து அதிகரிப்பு


பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நதி நீர் வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 16 Feb 2019 10:30 PM GMT (Updated: 16 Feb 2019 7:33 PM GMT)

பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நதி நீர் வரத்து அதிகரித்துள்ளது.

ஊத்துக்கோட்டை,

பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளில் சேமித்து வைக்கப்படும் தண்ணீரை கொண்டு சென்னை நகர மக்களின் குடிநீர் தேவை நிறைவேற்றப்படுகிறது. இந்த ஏரிகளில் நீர் இருப்பு மிகவும் குறைந்ததால் கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டு திட்டத்தின்படி கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்துவிடும்படி கடந்த மாதம் ஐதராபாத்தில் நடைபெற்ற கிருஷ்ணா நதி நீர் மேளாண்மை வாரிய கூட்டத்தில் தமிழக பொதுப்பணித்துறையை சேர்ந்த உயர்மட்ட அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்தனர்.

இதே போல் தண்ணீரின்றி கருகி வரும் நெற் பயிர்களை காப்பாற்ற தெலுங்கு கங்கை திட்டத்தின் கீழ் கிருஷ்ணா நதி கால்வாயில் தண்ணீர் திறந்து விடும்படி விவசாயிகள் ஆந்திர அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இந்த கோரிக்கையை ஏற்று ஆந்திர அரசு கடந்த 7-ந் தேதி கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்டது. வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த தண்ணீர் 10-ந் தேதி தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயின்டிற்கு வந்து சேர்ந்தது. 11-ந் தேதி இரவு பூண்டி ஏரியை சென்றடைந்தது. முதலில் வினாடிக்கு 10 கனஅடி விதம் தண்ணீர் வந்தது. இது படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று மாலை 5 மணிக்கு ஊத்துக்கோட்டை தாமரைகுப்பம் ஜீரோ பாயின்டிற்கு வினாடிக்கு 381 கனஅடி விதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடியாகும். இதில் 3 ஆயிரத்து 231 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து வைக்கலாம். நேற்று மாலை 5 மணி நிலவரப்படி ஏரியில் நீர் மட்டம் 19.51 அடியாக பதிவானது. 209 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. பூண்டியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு வினாடிக்கு 20 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

Next Story