ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக போராட்டம் தொடங்கிய நாளில் நெடுவாசலில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்


ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக போராட்டம் தொடங்கிய நாளில் நெடுவாசலில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 16 Feb 2019 11:00 PM GMT (Updated: 16 Feb 2019 8:15 PM GMT)

நெடுவாசலில் ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக போராட்டம் தொடங்கிய நாளில் கருப்பு கொடி ஏந்தி இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற கோரிக்கை விடுத்தனர்.

கீரமங்கலம்,

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் என்னும் இயற்கை எரிவாயு எடுக்க மத்திய அரசு கடந்த 2017-ம் ஆண்டு அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும், சினிமா நட்சத்திரங்களும் வந்து கலந்து கொண்டு போராட்டத்திற்கு ஆதரவு திரட்டினர். அதேபோல நல்லாண்டர்கொல்லை, வடகாடு, கீரமங்கலம், கோட்டைக்காடு ஆகிய பகுதிகளிலும் விவசாயிகள், இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். முதல் கட்டமாக 22 நாட்கள் நடந்த போராட்டத்தில் அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தியதில் தற்காலிகமாக கைவிடப்பட்டது. இந்த நிலையில் போராட் டக் குழுவிற்கு கொடுத்த வாக்குறுதியை மீறி மத்திய அரசு தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் கையெழுத்து போட்டதால் மக்கள் கொந்தளித்தனர்.

இதனால் நெடுவாசல் சுற்றியுள்ள 60 கிராம மக்கள் மீண்டும் 2-வது கட்டமாக போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தை அரசு கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து போராட்டத்திற்கான உயர்மட்டக்குழு கூடி மக்களுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பிறகு கடந்த வாரம் தனியார் நிறுவனத்தின் அதிகாரி ஒரு பத்திரிகைக்கு கொடுத்த பேட்டியில், நெடுவாசல் திட்டத்தை செயல்படுத்த நீதிமன்றம் சாதகமான தீர்ப்பு சொல்லும் என நம்புவதாக கூறியிருந்தார்.

இதையடுத்து நெடுவாசலை சுற்றியுள்ள பொதுமக்கள் திட்டத்தை செயல்படுத்த விடமாட்டோம் என்று கூறி வருகின்றனர். இந்தநிலையில் நேற்று பிப்ரவரி 16-ந்தேதி போராட்டம் தொடங்கிய 3-ம் ஆண்டு என்பதால் அந்த நாளை கருப்பு தினமான அனுசரித்து கருப்பு பேட்ஜ் அணிந்தும், கருப்பு கொடி ஏந்தியும் இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய, மாநில அரசுகளே ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய் என்று முழக்கமிட்டனர். ஆர்ப்பாட்டம் தொடங்கும் முன்பு அங்கு திரண்டிருந்த இளைஞர்கள் குண்டுவெடிப்பில் பலியான ராணுவ வீரர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சுதாகர், தங்ககண்ணன் ஆகியோர் கூறுகையில், நெடுவாசல் போராட்டம் நடந்தபோது வந்த மத்திய, மாநில அமைச்சர்கள் திட்டம் வராது என்று உறுதி அளித்தனர். இருப்பினும் அதன் பிறகு ஒப்பந்தம் கையெழுத்து போட்டனர். தற்போது தனியார் நிறுவனம் மீண்டும் நீதிமன்றம் வழியாக நுழைய வழி தேடுவதாக கூறுகின்றனர். அதனால் தான் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று 60 கிராமங்களில் நடந்த கிராமசபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றினோம். ஆனால் தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரவில்லை. இப்போது கஜா புயலால் பெரும் பாதிப்பிற்குள்ளான விவசாயிகள் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. எனினும் இதை திரும்ப கொண்டு வர நினைத்தால் மக்கள் போராட்டம் முன்பை விட அதிக அளவில் இருக்கும். மேலும் மத்திய, மாநில அரசுகள் இந்த திட்டத்தை ரத்து செய்வதுடன் டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும், என்றனர்.

Next Story