காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி நண்பர்களுடன் முக்கொம்புக்கு சுற்றுலா வந்த இடத்தில் துயரம்


காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி நண்பர்களுடன் முக்கொம்புக்கு சுற்றுலா வந்த இடத்தில் துயரம்
x
தினத்தந்தி 16 Feb 2019 11:00 PM GMT (Updated: 16 Feb 2019 8:19 PM GMT)

முக்கொம்பு காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலியானார். நண்பர்களுடன் சுற்றுலா வந்த இடத்தில் இந்த துயர சம்பவம் நேர்ந்தது.

ஜீயபுரம்,

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள புலிவலம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவர், அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மகன் யுவன்(வயது 18). இவர், ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு படித்து வந்தார். நேற்று மதியம் தனது கல்லூரி நண்பர்கள் 12 பேருடன் முக்கொம்பு சுற்றுலா மையத்திற்கு வந்தார். அங்கு சந்தோஷமாக பொழுதை கழித்த அவர்கள், காவிரி ஆற்றில் குட்டை போல தேங்கி நின்ற தண்ணீரில் இறங்கி குளிக்க ஆசைப்பட்டனர். அதன்படி, தண்ணீரில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தபோது யுவனும், வெங்கடேசனும் தண்ணீரில் மூழ்கினர். வெங்கடேசன் தண்ணீரில் தத்தளித்ததால் அவரை சக மாணவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

யுவன் நீரில் மூழ்கியதால் அவரை உடனடியாக காப்பாற்ற முடியவில்லை. பின்னர், அருகில் உள்ளவர்கள் உதவியுடன் குட்டையில் இறங்கி தேடினர். அப்போது யுவன் நீரில் மூழ்கி இறந்து கிடந்தார். அவரது உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஜீயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று யுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல, நேற்று காலை சமயபுரம் கோவிலுக்கு சென்றவர்கள் காவிரி ஆற்றில் இறங்கி குளித்த போது அவர்களில் ஒருவர் நீரில் மூழ்கினார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story