வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் மணப்பாறையில் நின்று சென்றது பொதுமக்கள் மகிழ்ச்சி


வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் மணப்பாறையில் நின்று சென்றது பொதுமக்கள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 16 Feb 2019 11:00 PM GMT (Updated: 16 Feb 2019 8:47 PM GMT)

மணப்பாறையில் நேற்று முதல் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் நின்று செல்ல தொடங்கியது. நீண்டநாள் கோரிக்கை நிறை வேறியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மணப்பாறை,

சென்னையில் இருந்து மதுரைக்கு இருமார்க்கத்திலும் செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் திருச்சி மாவட்டம், மணப்பாறையில் நிற்காமல் சென்று வந்தது. இதனால், மணப்பாறையில் இருந்து மதுரை மற்றும் சென்னை செல்லும் ரெயில் பயணிகள் அவதிப்பட்டு வந்தனர். வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் மணப்பாறையில் நின்று செல்ல வேண்டும் என்று ரெயில்வே அதிகாரிகளுக்கும், அரசியல் கட்சி பிரமுகர்களுக்கும் அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

குறுகிய ரெயில் பாதையாக இருந்தபோது பெரும்பாலான ரெயில்கள் மணப்பாறையில் நின்று சென்றன. ஆனால், அகல ரெயில் பாதையாக மாற்றப்பட்ட பிறகு குருவாயூர், பாண்டியன் உள்ளிட்ட ரெயில்களை தவிர வேறு எந்த எக்ஸ்பிரஸ் ரெயில்களும் மணப்பாறையில் நின்று செல்வதில்லை. பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தியதன்பேரில், இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் மணப்பாறையில் நின்று செல்கிறது.

இதன் தொடர்ச்சியாக தற்போது இரு மார்க்கத்திலும் செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலும் மணப்பாறை ரெயில் நிலையத்தில் 1 நிமிடம் நின்று செல்லும் என்று ரெயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது. அதன்படி, நேற்று மதுரையில் இருந்து வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று காலை 8-30 மணியளவில் மணப்பாறை ரெயில் நிலையத்தை வந்தடைந்தது.

அப்போது அங்கு தயாராக நின்று கொண்டிருந்த பொதுமக்கள் அந்த ரெயிலின் முன் பகுதியில் ஏறி மாலை கட்டி உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பின்னர், அந்த ரெயில் அங்கிருந்து புறப்பட தயாரானது. மணப்பாறையில் இருந்து ரெயில் சேவையை மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, மாநிலங்களவை உறுப்பினர் ரத்தினவேல், ஆர்.சந்திரசேகர் எம்.எல்.ஏ., பா.ஜ.க. திருச்சி புறநகர் மாவட்ட தலைவர் மனோகர்ராஜ், மாவட்ட பொது செயலாளர் செந்தில்தீபக் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். அப்போது, அங்கிருந்த பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. பின்னர் எக்ஸ்பிரஸ் ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. விழாவில், முன்னாள் எம்.எல்.ஏ. சின்னசாமி, அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் எம்.பி.வெங்கடாசலம்(மணப்பாறை), என்.சேது(வையம்பட்டி), பொதுக்குழு உறுப்பினர் முகமது இஸ்மாயில், மாவட்ட துணை செயலாளர் எண்டபுளி ராஜ்மோகன் மற்றும் பா.ஜ.க. ஒன்றிய தலைவர் சித்தாநத்தம் சுப்ரமணி, மாவட்ட செயலாளர் லலிதா அழகப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மணப்பாறையில், வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் நின்று செல்ல வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கை. இதற்காக போராட்டம், ஆர்ப்பாட்டம், கடையடைப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டது. இதேபோல் ரெயில்வே துறை, அரசியில் கட்சி பிரமுகர்கள் ஆகியோரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ரெயில்வே துறை சார்பில் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் மணப்பாறையில் நின்று செல்லும் என்ற அறிவிப்பு வந்ததும் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

நேர விவரம் : (மதுரையில் இருந்து சென்னை செல்லும்போது) மணப்பாறைக்கு வந்து சேரும் நேரம் : காலை 8.34 மணி; புறப்படும் நேரம் : 8.35 மணி 

Next Story