பாம்பன் பாலம் வழியாக ரெயில் போக்குவரத்து பற்றி பாதுகாப்பு ஆணையம் முடிவு செய்யும் கோட்ட மேலாளர் பேட்டி


பாம்பன் பாலம் வழியாக ரெயில் போக்குவரத்து பற்றி பாதுகாப்பு ஆணையம் முடிவு செய்யும் கோட்ட மேலாளர் பேட்டி
x
தினத்தந்தி 16 Feb 2019 10:45 PM GMT (Updated: 16 Feb 2019 10:14 PM GMT)

பாம்பன் பாலம் வழியாக ரெயில் போக்குவரத்து பற்றி பாதுகாப்பு ஆணையம் முடிவு செய்யும்.

ராமேசுவரம்,

ராமேசுவரம் ரெயில்வே நிலையத்தை நேற்று மதுரை ரெயில்வே கோட்ட மேலாளர் நீனு இட்டியேரா ஆய்வு செய்தார். அங்கு பிளாட்பாரம் பகுதியில் பணிகள் மற்றும் பயணிகள் காத்திருப்பு அறையில் நடந்து வரும் கட்டிட பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை பார்வையிட்டார். தொடர்ந்து ரெயில்வே நிலையத்தின் நுழைவு பகுதியில் பயணிகள் அனைவரும் பார்க்கும் வகையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மின்விளக்குகளால் ஆன ராமலிங்க பிரதிஷ்டை புகைப்படத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்விற்குபின் ரெயில்வே கோட்ட மேலாளர் நிருபர்களிடம் கூறியதாவது:– ராமேசுவரம் ரெயில்வே நிலையத்தில் நடந்து வரும் பல்வேறு பணிகளை ஆய்வு செய்ய வந்துள்ளேன். பல பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளேன். பாம்பன் ரெயில் பாலத்தில் பராமரிப்பு பணிகள் முழுமையாக முடிவடைந்து விட்டன. பாம்பன் ரெயில் பாலம் வழியாக ரெயில் போக்குவரத்து இயக்குவது குறித்து தலைமை பொறியாளர் மற்றும் பாதுகாப்பு ஆணையம் முடிவு செய்யும். இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின்போது ரெயில்வே பாதுகாப்பு படை கமாண்டர் முகைதீன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

ராமேசுவரம் ரெயில் நிலையத்தை ஆய்வு செய்ய வந்த மதுரை ரெயில்வே கோட்ட மேலாளரிடம் இந்து மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் பிரபாகரன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் நேரில் சந்தித்து மனு கொடுத்தனர். அதில் புண்ணிய தலமான ராமேசுவரம் கோவிலுக்கு ரெயில் மூலமாக ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பராமரிப்பு பணிகள் காரணமாக ரெயில்வே பாலம் வழியாக ரெயில் போக்குவரத்து இயக்கப்படாமல் உள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே பாம்பன் ரெயில் பாலம் வழியாக ராமேசுவரத்திற்கு விரைந்து ரெயில் போக்குவரத்தை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story