கார்-லாரிகள் அடுத்தடுத்து மோதல்: காய்கறி வியாபாரி உள்பட 2 பேர் சாவு கோதண்டராமர் சிலையை பார்க்க மெதுவாக ஓட்டியதால் விபரீதம்


கார்-லாரிகள் அடுத்தடுத்து மோதல்: காய்கறி வியாபாரி உள்பட 2 பேர் சாவு கோதண்டராமர் சிலையை பார்க்க மெதுவாக ஓட்டியதால் விபரீதம்
x
தினத்தந்தி 16 Feb 2019 11:10 PM GMT (Updated: 16 Feb 2019 11:10 PM GMT)

ஓசூர் அருகே கோதண்டராமர் சிலையை பார்ப்பதற்காக மெதுவாக ஓட்டிய போது கார்-லாரிகள் அடுத்தடுத்து மோதியதில் காய்கறி வியாபாரி உள்பட 2 பேர் பலியானார்கள்.

ஓசூர்,

கர்நாடக மாநிலம் பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 43). இவர் பெங்களூரு கே.ஆர். மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். இவரது நண்பர் வேலு (39). இவர் பெங்களூரு ஜெ.பி. நகர் பகுதியை சேர்ந்தவர். வெல்டிங் பட்டறை நடத்தி வந்தார்.

நேற்று காலை இவர்கள் வாடகை காரில், பெங்களூருவில் இருந்து சபரிமலைக்கு சென்றனர். அவர்களுடன் பெங்களூரு சிக்கமாவள்ளி பகுதியை சேர்ந்த இளையராஜா (38) என்பவரும் சென்றார். காரை ஜெ.பி. நகர் பகுதியை சேர்ந்த சரவணபாபு (36) என்பவர் ஓட்டிச் சென்றார்.

இந்த நிலையில் அவர்கள் சென்ற கார் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சாமல்பள்ளம் பக்கமாக ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையின் வலதுபுறத்தில் லாரியுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கோதண்டராமர் சிலையை பார்ப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் அங்கு நின்று கொண்டிருந்தனர். இதையொட்டி சரவணன் சென்ற காருக்கு முன்னால் சென்ற லாரியின் டிரைவர், சிலையை பார்ப்பதற்காக லாரியின் வேகத்தை குறைத்தார். அதே போல சரவணனின் கார் டிரைவரும் வேகத்தை குறைத்ததாக கூறப்படுகிறது.

அப்போது எதிர்பாராதவிதமாக முன்னால் சென்ற லாரி மீது சரவணன் வந்த கார் மோதியது. இதைத் தொடர்ந்து பின்னால் வேகமாக வந்து கொண்டிருந்த மற்றொரு கன்டெய்னர் லாரி கார் மீது பயங்கரமாக மோதி அதன் மீது ஏறியது. இதில் 2 லாரிகளுக்கு இடையே சிக்கி கார் அப்பளம் போல நொறுங்கியது. மேலும் காரில் இருந்த சரவணன் உள்பட 4 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.

அவர்களில் சரவணன் மற்றும் வேலு ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். டிரைவர் சரவணபாபு, இளையராஜா ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த சூளகிரி போலீசார் விபத்து நடந்த இடத்திற்கு சென்று பலியான சரவணன், வேலு ஆகிய 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்துக்குள்ளான லாரிகள் மற்றும் காரை அங்கிருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். எனவே இந்த விபத்து பற்றிய விவரங்கள் ஆகும்.

Next Story