பிரச்சினைகள் தொடர்பாக பொதுமக்கள் மன்றத்தில் விவாதிக்க தயார்: கவர்னர் கிரண்பெடி சவால், நாராயணசாமி பதிலடி


பிரச்சினைகள் தொடர்பாக பொதுமக்கள் மன்றத்தில் விவாதிக்க தயார்: கவர்னர் கிரண்பெடி சவால், நாராயணசாமி பதிலடி
x
தினத்தந்தி 16 Feb 2019 11:30 PM GMT (Updated: 16 Feb 2019 11:30 PM GMT)

பிரச்சினைகள் தொடர்பாக முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்களுடன் பொதுமக்கள் மன்றத்தில் விவாதிக்க தயார் என்று கவர்னர் கிரண்பெடி சவால் விடுத்துள்ளார்.

புதுச்சேரி,

புதுவையில் பொதுமக்களுக்கான திட்டங்களை கவர்னர் கிரண்பெடி தடுப்பதாக கூறியும், அவரை கண்டித்தும் முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சி தலைவர்கள் கவர்னர் மாளிகை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களது போராட்டம் நேற்று 4-வது நாளாக நீடித்தது.

இந்தநிலையில் புதுவை மக்களுக்காக சமூக வலை தளத்தில் கவர்னர் கிரண்பெடி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

புதுவையை சுத்தமாகவும், பாதுகாப்பாகவும், பசுமையாகவும் வைத்திருக்க கடந்த 2½ வருடங்களாக கவர்னர் மாளிகை முயற்சி எடுத்து பணிகளை செய்து வருகிறது. கண்டிப்பான நடவடிக்கை களால் கடன் வாங்க வேண்டிய அவசியமில்லாத நிலையை ஏற்படுத்தி உள்ளோம்.

அனைத்து நிதியையும் சரியான ஏழைகள் பயன்பெற வழி ஏற்படுத்தினோம். அதை மாற்றுப் பணிகளுக்கு அனுமதிக்கவில்லை. தலைமை செயலாளர், நிதித்துறை செயலாளரின் ஆதரவுடன் இவற்றை செய்ய முடிந்தது. பணம் ஒதுக்கப்படாதவற்றுக்கு நிதியை எப்படி செலவிட முடியும்?

நீர்நிலைகள், வாய்க்கால் களை தூர்வார நன்கொடைகள் பெற்று செய்தோம். இதன் மூலம் வெள்ளம் மற்றும் ஏழைகளின் இழப்புகள் தவிர்க்கப்பட்டன. 216 கள ஆய்வுகளை மேற்கொண்டு மக்கள் தேவைகளை அறிந்து தீர்த்து வைத்தோம்.

நீண்ட நாட்களுக்கு பிறகு முறையான நிதி நிர்வாகத்தின் காரணமாக சுற்றுலா வாரியத்தில் ஊழியர்களின் வருங்கால வைப்புநிதி ரூ.1 கோடியை பெறமுடிந்தது. நிதி விதிமுறைகளை மீறி மானியங்களை வழங்கவில்லை. இது முதல்-அமைச்சரை மிகவும் தொந்தரவுக்குள்ளாக்கியது.

சாலை பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்காததால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. சாதாரண மனிதனின் உழைப்புதான் அந்த குடும்பத்தையே காப்பாற்றுகிறது. அதற்காக ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கி அதை அமல்படுத்துவதை தீவிரமாக்கினோம்.

போராட்டத்தையொட்டி கவர்னர் மாளிகையை சுற்றி சாலைகள் அடைக்கப்பட்டுள்ளதற்கும், சாவு மணி அடிக்கப்படுவதால் அந்த பகுதியில் உள்ளவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதற்கும் வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

தற்போது எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பாக முதல்-அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுடன் நான் பொதுமக்கள் மன்றத்தில் விவாதிக்க தயாராக உள்ளேன். குறிப்பாக ஏழைகளுக்கான அரிசி, ரோடியர், சுதேசி மில், சர்க்கரை ஆலை மற்றும் உள்ளவைபற்றி விவாதிக்கலாம். முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்களை வருகிற 21-ந்தேதி காலை 10 மணிக்கு சந்தித்து பேச உள்ளேன்.

இவ்வாறு கவர்னர் கிரண்பெடி தெரிவித்துள்ளார்.

மேலும், கவர்னர் மாளிகை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முதல்- அமைச்சர் நாராயணசாமி கோப்புகளை பார்ப்பதையும் அவரது அருகே முதல்-அமைச்சரின் செயலாளர் பார்த்திபன் நிற்கும் படத்தையும் பதிவிட்டுள்ள கவர்னர் கிரண்பெடி, இதுதான் சட்டமா? இதையே முதல்-அமைச்சர் அலுவலகம் முன்பு சாதாரண மனிதர் அமர்ந்து செய்தால் அவர் என்ன செய்வார்? காவல்துறை தன்னுடைய பணியை செய்யவேண்டும் என்றும் கிரண்பெடி அதில் கூறியுள்ளார்.

கவர்னர் கிரண்பெடிக்கு பதிலடி தரும் வகையில் முதல்-அமைச்சர் நாராயணசாமியும் சமூக வலைதளத்தில் கருத்தை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

புதுவை மாநிலத்தின் கடனை தள்ளுபடி செய்யும் விதமாக நீங்கள் எத்தனை முறை மத்திய நிதி மந்திரியை சந்தித்து வலியுறுத்தினீர்கள்? மாநிலத்துக்கான மானியத்தை உயர்த்தி வழங்குமாறு என்றாவது மத்திய அரசை கேட்டுக்கொண்டது உண்டா? சமூக வலைதள பிரசாரம் மூலம் புதுவை மக்களை முட்டாளாக்க வேண்டாம்.

சமூக பொறுப்புணர்வு திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட நிதியை சுய விளம்பரத்துக்காக தவறாக பயன்படுத்தியது, நிதி அதிகாரத்தை மத்திய அரசின் அறிவுறுத்தல்படி பகிர்ந்து அளிக்காதது ஆகியவற்றுக்காக பொதுமக்களிடம் மன்னிப்பு கோருங்கள்.

காண்டிராக்ட் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனத்தை நிறுத்தியது, தாழ்த்தப்பட்ட மக்களுக்கான நலத்திட்டங்களை தடை செய்ததற்கும், தொழிற்சாலை வளர்ச்சியை தடுத்ததற்கும், கரும்பு விவசாயிகளுக்கு எதிராக செயல்பட்டதற்கும், ஏனாம் வெள்ளத் தடுப்பு திட்டங்களை தடுத்ததற்கும் புதுச்சேரி மக்களிடம் மன்னிப்பு கேளுங்கள்.

போலீசார் தேர்வுக்கு வயது வரம்பு தளர்வு அளிக்காததற்கும், இலவச அரிசி திட்டத்தை நிறுத்தியதற்கும், ரோடியர், பாரதி சுதேசி மில் ஊழியர்கள் நலனுக்கு எதிராக செயல்பட்டதற்கும் புதுச்சேரி மக்களிடம் மன்னிப்பு கேளுங்கள்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story