தீவிரவாதிகள் தாக்குதலில் பலியான துணை ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி


தீவிரவாதிகள் தாக்குதலில் பலியான துணை ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி
x
தினத்தந்தி 17 Feb 2019 10:45 PM GMT (Updated: 17 Feb 2019 6:57 PM GMT)

தீவிரவாதிகள் தாக்குதலில் பலியான துணை ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவாரூர்,

காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் துணை ராணுவ படை வீரர்கள் பலியாகினர். அவர்களின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி திருவாரூர் எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு எல்.ஐ.சி. ஊழியர் சங்கத்தின் சார்பில் நடந்தது. நிகழ்ச்சிக்கு சங்கத்தின் செயலாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். திருவாரூர் தொழிற் சங்க கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் ராமலிங்கம், குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் கூட்டமைப்பு நிர்வாகி சாமிநாதன், அகில இந்திய வங்கி ஊழியர் சங்க தலைவர் காளிமுத்து, எல்.ஐ.சி. ஊழியர் சங்க தலைவர் தெட்சிணாமூர்த்தி, எல்.ஐ.சி. முகவர் சங்க தலைவர்கள் முத்து, நந்தகோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர். அதேபோல் திருத்துறைப்பூண்டியில் துணை ராணுவ வீரர்களின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மவுன ஊர்வலம் நடந்தது. திருத்துறைப்பூண்டி-வேதை சாலையில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் பல்வேறு வீதிகள் வழியாக புதிய பஸ் நிலையத்தில் முடிவடைந்தது. அதைத்தொடர்ந்து மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதேபோல துணை ராணுவ வீரர்களுக்கு வடுவூரில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. அதனை தொடர்ந்து வடுவூர் பஸ் நிறுத்தம் அண்ணாசிலை அருகே துணை ராணுவ வீரர்களின் உருவபடத்துக்கு பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் வடுவூர் பெரியார்சிலையில் இருந்து கடைவீதி வரை மவுன ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தில் ஏராளமான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

திருவாரூர் விஜயபுரம் வர்த்தகர் சங்கம் சார்பில் திருவாரூர் புதிய ரெயில் நிலையத்தில் இருந்து கடைவீதிகள் வழியாக தெற்குவீதி, நகர்மன்றம் வரை மவுன ஊர்வலம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து துணை ராணுவவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் வர்த்தகர் சங்க தலைவர் பாலமுருகன், பொதுச்செயலாளர் குமரேசன், துணைத்தலைவர் ஆனந்த், செய்தி தொடர்பாளர் ஜமால்முகமது மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த துணை ராணுவ வீரர்களுக்கு கோட்டூரில் பா.ஜனதா கட்சி சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட பொதுச்செயலாளர் ராகவன் தலைமை தாங்கினார். இதில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் உதயகுமார், மாவட்ட செயலாளர் வினோத், மாவட்ட மருத்துவ பிரிவு தலைவர் வினோத்குமார், விவசாய அணி மாவட்ட செயலாளர் குமார், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story