தஞ்சை மாவட்டத்தில் 94 நாட்களாக முடங்கிய மீன்பிடி தொழில் மீனவர்கள் விரக்தி


தஞ்சை மாவட்டத்தில் 94 நாட்களாக முடங்கிய மீன்பிடி தொழில் மீனவர்கள் விரக்தி
x
தினத்தந்தி 17 Feb 2019 11:00 PM GMT (Updated: 17 Feb 2019 7:20 PM GMT)

தஞ்சை மாவட்டத்தில் 94 நாட்களாக மீன்பிடி தொழில் முடங்கி கிடப்பதால் மீனவர்கள் விரக்தி அடைந்துள்ளனர்.

சேதுபாவாசத்திரம்,

தஞ்சை மாவட்டத்தின் முக்கிய தொழில்களான தென்னை விவசாயம், மீன்பிடி தொழில் ஆகியவற்றை கஜா புயல் முடக்கி விட்டது. இந்த தொழில்களை நம்பி வாழ்க்கை நடத்தி வந்தவர்கள் தற்போது வருமானத்துக்கு வழியின்றி சிரமப்பட்டு வருகிறார்கள். புயல் தாக்கி 94 நாட்களான பிறகும் மீனவர்களால் தங்கள் தொழிலுக்கு திரும்ப முடியவில்லை.

சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம் ஆகிய இடங்களில் உள்ள மீன்பிடி துறைமுகங்களில் நிறுத்தப்பட்டிருந்த விசைப்படகுகளை புயல் உருக்குலைத்து சென்று விட்டதால், மீன்பிடி தொழில் முடங்கி கிடப்பதாக மீனவர்கள் விரக்தியுடன் கூறுகிறார்கள். முழுமையாக சேதம் அடைந்த படகுகளுக்கு ரூ.5 லட்சமும், பகுதி அளவு சேதம் அடைந்த படகுகளுக்கு ரூ.3 லட்சமும் நிவாரணமாக வழங்கப்படும் என்றும், படகு உரிமையாளர், மீன்வளத்துறை இயக்குனர் ஆகியோரின் கூட்டு வங்கி கணக்கில் நிவாரண தொகை வரவு வைக்கப்படும் என்றும் அரசு அறிவித்தது.

ஆனால் நிவாரண தொகை போதுமான அளவு இல்லை என்றும், நிவாரண தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும், மீனவர்களின் தனி வங்கி கணக்கில் நிவாரண தொகையை செலுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்த மீனவர்கள் நிவாரண தொகை பெற தேவையான வங்கி கணக்கு தொடர்பான விவரங்களை அரசிடம் சமர்ப்பிக்க மறுத்து வருகிறார்கள். இதனால் இதுவரை மீனவர்கள் யாருக்கும் நிவாரணம் கிடைக்கவில்லை. மீனவர்கள் சிலர் கடும் சிரமங்களுக்கு மத்தியில் பகுதி அளவு சேதம் அடைந்த படகுளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து விசைப்படகு மீனவர் பேரவை மாநில செயலாளர் தாஜூதீன் கூறியதாவது:- சாதாரண பைபர் கிளாஸ் படகு வாங்குவதற்கே ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் தேவைப்படுகிறது. 50 அடி நீளம் கொண்ட சிறிய விசைப்படகை தயார் செய்ய ரூ.30 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை தேவை. ஆனால் அரசு, முழுமையான சேதம் அடைந்த படகுகளுக்கு ரூ.5 லட்சம் மட்டுமே நிவாரணம் அறிவித்துள்ளது. 2004-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையின்படி இந்த நிவாரண தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது மிகவும் குறைவாகும்.

எனவே அரசாணையை மாற்றி, நிவாரண தொகையை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். படகு உரிமையாளர், மீன்வளத்துறை இயக்குனர் ஆகியோரின் கூட்டு வங்கி கணக்கில் நிவாரண தொகையை செலுத்துவதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. எனவே மீனவர்களின் தனி வங்கி கணக்கில் நிவாரண தொகையை செலுத்த வேண்டும் என வலியுறுத்தினோம். அதன்படி நிவாரணத்தை வழங்க அரசு முடிவு செய்து உள்ளது.

நிவாரணத்தை ரூ.10 லட்சமாக உயர்த்தி அறிவிக்கும் வரை நிவாரணத்தை பெற்றுக்கொள்ள மாட்டோம் என்பதில் உறுதியுடன் உள்ளோம். முடங்கி கிடக்கும் மீன்பிடி தொழில் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story