பூதப்பாண்டி அருகே ரோந்து சென்ற ஏட்டு மீது தாக்குதல் அண்ணன்-தம்பி கைது


பூதப்பாண்டி அருகே ரோந்து சென்ற ஏட்டு மீது தாக்குதல் அண்ணன்-தம்பி கைது
x
தினத்தந்தி 17 Feb 2019 10:00 PM GMT (Updated: 17 Feb 2019 9:32 PM GMT)

பூதப்பாண்டி அருகே ரோந்து சென்ற ஏட்டை தாக்கிய அண்ணன்-தம்பியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பூதப்பாண்டி,

பூதப்பாண்டி போலீஸ் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக பணிபுரிபவர் டேவிட்ராஜ். இவர், போலீஸ் நண்பர்கள் குழுவை சேர்ந்த ரதீஸ் என்பவருடன் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் ரோந்து சென்றார்.

பூதப்பாண்டி அருகே உள்ள ஆண்டித்தோப்பு ஆற்றுப்பாலம் மேற்கு பக்கம் செல்லும் போது, அங்கு 2 வாலிபர்கள் நின்று கொண்டு இருந்தனர். அவர்களிடம் நள்ளிரவில் இங்கு என்ன செய்கிறீர்கள் என்று டேவிட்ராஜ் கேட்டார். உடனே வாலிபர்கள் 2 பேரும் தகாத வார்த்தைகள் பேசி, டேவிட்ராஜ் மற்றும் ரதீஸ் ஆகியோரை தாக்கி கீழே தள்ளி, கொலை மிரட்டல் விடுத்து சென்றதாக கூறப்படுகிறது.

இதுபற்றி பூதப்பாண்டி போலீசில் டேவிட்ராஜ் புகார் செய்தார். அதன்பேரில் 2 பேரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார்கள். அப்போது, அவர்கள் எட்டாமடையை அடுத்த மேலகிளவக்கல்விளை பகுதியை சேர்ந்த மனோன்மணியின் மகன்கள் ஜெனிஸ் (வயது 21), அனீஸ் (28) என்று தெரிய வந்தது. மேலும் ஜெனிஸ் ராணுவ வீரராகவும், அனீஸ் வெளிநாட்டில் வேலை செய்வதும், இருவரும் விடுமுறையில் ஊருக்கு வந்ததாகவும் கூறினார்கள்.

அதைத்தொடர்ந்து ஜெனிஸ், அனீஸ் ஆகிய 2 பேர் மீதும் பூதப்பாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Next Story