ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது வைகோ பேட்டி


ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது வைகோ பேட்டி
x
தினத்தந்தி 18 Feb 2019 11:15 PM GMT (Updated: 18 Feb 2019 6:51 PM GMT)

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை விதித்து அளிக்கப்பட்ட சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது என தஞ்சையில், வைகோ கூறினார்.

தஞ்சாவூர்,

ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து 22 ஆண்டுகளாக நான் போராடி வருகிறேன். கடந்த 2010-ம் ஆண்டு செப்டம்பர் 28-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் நான் தொடர்ந்த வழக்கில், ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என தீர்ப்பு வந்தது.

மறுநாளே சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்று உண்மைகளை மறைத்து ஸ்டெர்லைட் நிர்வாகம் தடை பெற்றது. ஆலைக்கு எதிராக கடந்த ஆண்டு பிப்ரவரி 12-ந் தேதி கிராம மக்கள் போராட்டம் தொடங்கினர். 100-வது நாளன்று 13 பேர் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டனர்.

அதன் பின்னர் உடனடியாக ஆலைக்கு எதிராக மதுரை ஐகோர்ட்டு கிளையில் நான் வழக்கு தொடுத்தேன். எனது வாதத்தை ஏற்று அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் சொன்னார்கள். ஆனால் அரசு கொள்கை முடிவு எடுக்கவில்லை. அமைச்சரவையில் விவாதிக்கவில்லை. சட்ட சபையிலும் தீர்மானம் நிறைவேற்றவில்லை. காரணம் பூனைக்கு தோழன், பாலுக்கு காவலன் என கண்ணாமூச்சி நாடகத்தை தமிழக அரசு நடத்தியது.

இதன்பின்னர் ஸ்டெர்லைட் நிர்வாகம், டெல்லி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தனர். ஆலையை திறக்கலாம் என பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் செய்யப்பட்ட மேல்முறையீடு வழக்கில் என்னையும் இணைத்துக்கொண்டு வாதாடினேன். எங்கே சென்றாலும் ஆலையை நிச்சயம் திறப்போம் என வேதாந்தா அதிபர் எப்படி சொன்னார் என்று கேள்வி எழுப்பினேன்.

ஸ்டெர்லைட் ஆலையில் சுற்றுச்சூழல் விதிகள் மீறப்பட்டுள்ளதாக உரிய ஆதாரங்களுடன் கோர்ட்டில் வாதாடினேன். ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையை வெளியேற்ற 4 புகை கூண்டுகள் இருக்க வேண்டும். ஆனால் ஒரு புகை கூண்டு மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. நச்சுப்புகையில் புற்றுநோயை உருவாக்கும் காரணிகள் இருப்பதாக வேதாந்தா குழுமத்தின் இணையதளத்தில் உள்ளது. இதை எல்லாம் நான் எடுத்துக்காட்டிவாதிட்டேன்.

இந்த வழக்கில் ஒருவேளை தீர்ப்பு வேறுவிதமாக வந்திருந்தால் என்ன செய்வது? என்று யோசித்துக்கொண்டே இருந்தேன். இன்று நீதி வென்றுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பை நீதிபதிகள் தூக்கி போட்டு விட்டனர். நீதி இந்த நாட்டில் காப்பாற்றப்படும். ஜனநாயகம் காப்பாற்றப் படும்.

தங்களை காக்கும் கடவுளாக நீதிபதிகளை மக்கள் கருதுகின்றனர். நல்ல தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு தமிழக மக்கள் சார்பில் நன்றி தெரிவித்து தலை வணங்குகிறேன். இன்று என் வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாள். மகிழ்ச்சியின் உச்சத்திற்கு சென்று, மகிழ்ச்சியில் ஆகாய வெளியில் மிதந்து கொண்டு இருக்கிறேன்.

அ.தி.மு.க. அரசின் இரட்டை வேடம் கலைந்தது. கோடிக்கணக்கில் பணத்தை கொடுத்து அரசியல்வாதிகளை தனது வலைக்குள் வீழ்த்திய ஸ்டெர்லைட் நிர்வாகம் நீதிக்கு முன்பு மண்டியிட்டு தோற்றது. 100 நாட்கள் போராடிய மக்கள் மட்டுமின்றி, சுட்டுக் கொல்லப்பட்ட 13 பேரின் ரத்தம் இந்த ஆலையை மூட வைத்திருக்கிறது. இந்தியாவில் நீதி காப்பாற்றப்படுகிறது. ஆலை நிர்வாகம் அடுத்து ஐகோர்ட்டிற்கு செல்லும். ஆனாலும் ஆலையை நாங்கள் என்றைக்கும் திறக்கவிட மாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது துணை பொதுச் செயலாளர் துரை.பாலகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் உதயகுமார் ஆகியோர் உடன் இருந்தனர். பின்னர் அனைவருக்கும் வைகோ இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

Next Story