திருச்சிற்றம்பலம் அருகே ஆட்டோ மீது வேன் மோதல்; மாமியார்-மருமகள் உள்பட 3 பேர் பலி


திருச்சிற்றம்பலம் அருகே ஆட்டோ மீது வேன் மோதல்; மாமியார்-மருமகள் உள்பட 3 பேர் பலி
x
தினத்தந்தி 18 Feb 2019 11:00 PM GMT (Updated: 18 Feb 2019 6:56 PM GMT)

திருச்சிற்றம்பலம் அருகே ஆட்டோ மீது வேன் மோதிய விபத்தில் மாமியார்-மருமகள் உள்பட 3 பேர் பரிதாபமாக பலியானார்கள்.

திருச்சிற்றம்பலம்,

திருவாரூர் மாவட்டம் வடுவூரை சேர்ந்தவர் சத்தியராஜ்(வயது 35). இவர், தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே உள்ள ஆவணம் கைகாட்டியில் குடும்பத்தினருடன் தங்கியிருந்து சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வந்தார். இவரது மனைவி கன்னிகா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

நேற்று பிற்பகல் புதுக்கோட்டை மாவட்டம் காசிம்புதுப்பேட்டையைச் சேர்ந்த அப்துல் மஜீது மனைவி பாத்திமா பீவி(70), அவரது மருமகள் மெகருன்னிஷாபேகம்(37) ஆகிய இருவரும் சத்தியராஜ் ஆட்டோவில் மருத்துவ பரிசோதனைக்காக பட்டுக்கோட்டைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

திருச்சிற்றம்பலம்-பட்டுக்கோட்டை சாலையில் உள்ள குறிச்சி பூங்கா புனல்வாசல் பிரிவு சாலை அருகே ஆட்டோ வந்து கொண்டிருந்தது. அப்போது அறந்தாங்கியில் இருந்து பட்டுக்கோட்டை நோக்கி சென்ற வேன், எதிர்பாராதவிதமாக ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் ஆட்டோ டிரைவர் சத்தியராஜ் தனது இருக்கையிலேயே உடல் நசுங்கி பலியானார்.

படுகாயம் அடைந்த நிலையில் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மெகருன்னிஷாபேகம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இவரது கணவர் முகமது ரசூல் மலேசியாவில் வேலை பார்த்து வருகிறார்.

விபத்தில் படுகாயம் அடைந்த பாத்திமா பீவி உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து குறித்து திருச்சிற்றம்பலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேதவல்லி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மதிவாணன் ஆகியோர் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் வேன் டிரைவர் நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள சின்னத்தம்பூர் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜன் மகன் செந்தில்குமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story