குடிநீர் கேட்டு கிராம மக்கள் கலெக்டரிடம் மனு


குடிநீர் கேட்டு கிராம மக்கள் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 18 Feb 2019 10:45 PM GMT (Updated: 18 Feb 2019 8:40 PM GMT)

குடிநீர் கேட்டு கிராம மக்கள் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமியிடம் மனு கொடுத்தனர்.

அரியலூர்,

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

இதில் அரியலூர் மாவட்டம், உடையார்பாளையத்தை அடுத்த பெருமாள் தீயனூர் காலனித்தெருவை சேர்ந்த பெண்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். எங்கள் பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கி வந்த மின்மோட்டார் கடந்த ஆண்டு பழுது ஏற்பட்டது. இதனையடுத்து அதிகாரிகள், சரி செய்தவற்காக மின் மோட்டாரை கழற்றி சென்றனர். ஆனால் இதுவரை அதிகாரிகள் அந்த மின் மோட்டாரை சரி செய்து, எங்களுக்கு குடிநீர் வழங்கவில்லை. குடிநீருக்காக அருகில் உள்ள கிராமங்களுக்கு சென்று வருவதால் நாங்கள் குறித்த நேரத்திற்கு, வேலைக்கும், எங்களது குழந்தைகள் பள்ளிக்கும் செல்ல முடியவில்லை. எனவே எங்கள் பகுதியில் விரைவில் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

அரியலூர் தெற்கு கிராமம் எம்.ஜி.ஆர். நகரில் வசிக்கும் 40 குடும்பத்தினர் பட்டா கேட்டு மனு அளித்தனர்.

இதேபோல் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, தொகுப்பு வீடுகள், திருமண நிதியுதவி உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மொத்தம் 630 மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் அதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கி, உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

தொடர்ந்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு தையல் எந்திரங்களை வழங்கினார்.

இந்த கூட்டத்தில், சமூக பாதுகாப்புத் திட்ட துணை கலெக்டர் பூங்கோதை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் (பொறுப்பு) பாலாஜி மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story