சம்பள உயர்வு கோரி ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


சம்பள உயர்வு கோரி ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 18 Feb 2019 11:00 PM GMT (Updated: 18 Feb 2019 9:22 PM GMT)

சம்பள உயர்வு கோரி ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் அரசு ரப்பர் கழக தொழிலாளர்கள் 1-12-2016 முதல் வழங்க வேண்டிய சம்பள உயர்வு கோரி பலகட்டங்களாக ரப்பர் கழக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இந்தநிலையில் இடைக்கால நிவாரணமாக ரூ.23-ஐ அவர்களுடைய சம்பளத்தில் உயர்த்தி வழங்க அரசால் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதற்கிடையே இடைக்கால நிவாரணமாக அறிவிக்கப்பட்ட ரூ.23-ஐ சம்பள உயர்வாக அறிவித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே அரசு ரப்பர் கழக தொழிலாளர்களுக்கு உடனடியாக நியாயமான ஊதிய உயர்வை வழங்க வேண்டும் என்று கோரி நேற்று தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஐ.என்.டி.யு.சி., மதசார்பற்ற ஜனதாதளம் உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்த போராட்டம் நடந்தது.

இதையொட்டி நாகர்கோவில் வடசேரியில் உள்ள அரசு ரப்பர் கழக நிர்வாக இயக்குனர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டமும் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் தொ.மு.ச. நிர்வாகிகள் இளங்கோ, ஞானதாஸ், ஐ.என்.டி.யு.சி. மாவட்ட தலைவர் அனந்தகிருஷ்ணன், சி.ஐ.டி.யு. தோட்ட தொழிலாளர்கள் சங்க பொதுச்செயலாளர் வல்சலம், பி.எம்.எஸ். மாவட்ட தலைவர் குமாரதாஸ், குமரி மாவட்ட மதசார்பற்ற ஜனதாதளம் தோட்ட தொழிலாளர் சங்க தலைவர் ஞானதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். அவர்களுக்கு ஆதரவாக குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களும் எழுப்பப்பட்டன. இதில் ஏராளமான ரப்பர் தோட்ட தொழிலாளர்களும் கலந்து கொண்டனர்.

ரப்பர் கழக தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டத்தையொட்டி நேற்று ரப்பர் பால்வெட்டும் தொழில் உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டது.

Next Story