கோடநாடு வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாத மனோஜ்சாமிக்கு பிடிவாரண்டு


கோடநாடு வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாத மனோஜ்சாமிக்கு பிடிவாரண்டு
x
தினத்தந்தி 18 Feb 2019 11:15 PM GMT (Updated: 18 Feb 2019 9:44 PM GMT)

கோடநாடு வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாத மனோஜ்சாமிக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 24.4.2017-ந் தேதி காவலாளி ஓம்பிரகாஷ் கொலை செய்யப்பட்டார். மேலும் எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டன. இதுகுறித்து கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷயான், மனோஜ், மனோஜ்சாமி, திபு, ஜித்தின்ராய், உதயகுமார், சந்தோஷ்சாமி, சதீசன், சம்சீர் அலி, பிஜின் ஆகிய 10 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு ஊட்டி கோர்ட்டில் நடந்து வருகிறது.

கடந்த 8-ந் தேதி வழக்கு விசாரணையின்போது கோர்ட்டில் ஆஜராகாத ஷயான், மனோஜ், திபு, பிஜின் ஆகிய 4 பேருக்கு பிடிவாரண்டு பிறப்பித்தும், ஷயான் மற்றும் மனோஜ் ஆகியோருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்தும் நீதிபதி உத்தரவிட்டார். இதற்கிடையே கடந்த 10-ந் தேதி கேரளாவில் திபு, பிஜின் ஆகிய 2 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து, ஊட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஷயான், மனோஜ் 2 பேரும் தலைமறைவாக இருக்கின்றனர். இதையடுத்து சென்னை போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்தில் இருந்து ஷயான், மனோஜ் ஆகியோர் நாட்டை விட்டு தப்பி செல்லாமல் இருக்க ‘லுக் அவுட்’ நோட்டீஸ் விடப்பட்டது. இந்த நிலையில் நேற்று கோடநாடு வழக்கு ஊட்டி கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. கோவை மத்திய சிறையில் இருந்து திபு, பிஜின் ஆகிய 2 பேரை போலீசார் பாதுகாப்பாக அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். சம்சீர் அலி, சதீசன், உதயகுமார், சந்தோஷ்சாமி, ஜித்தின்ராய் ஆகிய 5 பேர் கோர்ட்டில் ஆஜரானார்கள்.

ஆனால் மனோஜ்சாமி ஆஜராகவில்லை. அவர் தரப்பில் வக்கீல் சிவக்குமார் ஆஜராகி மனோஜ்சாமியின் தாயாருக்கு திதி கொடுப்பதால் ஆஜராக முடியவில்லை என்று மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி வடமலை மனுவை தள்ளுபடி செய்ததுடன், மனோஜ்சாமிக்கு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார்.

மேலும் வருகிற மார்ச் மாதம் 4-ந் தேதி வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டது. திபு, பிஜின் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று(செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வருகிறது. பின்னர் திபு, பிஜின் 2 பேரும் போலீஸ் பாது காப்புடன் கோவை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 

Next Story