தஞ்சையில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தம் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்


தஞ்சையில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தம் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்
x
தினத்தந்தி 19 Feb 2019 11:00 PM GMT (Updated: 19 Feb 2019 7:16 PM GMT)

தஞ்சையில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் 2-வது நாளாக நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்,

பி.எஸ்.என்.எல். அதிகாரிகள், ஊழியர்கள் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் 3 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தை நேற்று முன்தினம் தொடங்கினர். நேற்று 2-வது நாளாக இந்த போலை நிறுத்தப்போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில், பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 15 சதவீத நிர்ணய பலனுடன் 3 சதவீத ஊதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும். 4ஜி அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்ய வேண்டும். 2017-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் பி.எஸ்.என்.எல். ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும் எனபன உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தஞ்சை மேரீஸ்கார்னர், பாலாஜிநகரில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்திற்கு ஒரு சிலரை தவிர அதிகாரிகள், ஊழியர்கள் யாரும் பணிக்கு செல்லவில்லை. இதனால் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. சேவைகளும் பாதிக்கப்பட்டன. அலுவலக நுழைவு கதவுகளும் பூட்டப்பட்டிருந்தது.

பின்னர் தஞ்சை மேரீஸ்கார்னரில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு அதிகாரிகள், ஊழியர்கள் பல்வேறு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு தஞ்சை மாவட்ட பி.எஸ்.என்.எல். அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப் பாளர் உதயன், பொருளாளர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தஞ்சை மாவட்டத்தில் அதிகாரிகள், ஊழியர்கள் என 600 பேர் உள்ளனர். இவர்களில் 450 பேர் பணிக்கு செல்லவில்லை. இந்த போராட்டத்தினால் பணிகள் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் சிரமப்பட்டனர். தொலைபேசி கட்டணம் செலுத்துவதற்காக வந்த ஏராளமான வாடிக்கையாளர்களும் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.

இந்த வேலை நிறுத்தப் போராட்டம் நாளையும் (புதன்கிழமை) நடை பெறுகிறது.

Next Story