ரெயில் நிலைய பிளாட்பாரங்களில் இடஒதுக்கீடு அடிப்படையில் கடைகள் வைக்க அனுமதி


ரெயில் நிலைய பிளாட்பாரங்களில் இடஒதுக்கீடு அடிப்படையில் கடைகள் வைக்க அனுமதி
x
தினத்தந்தி 19 Feb 2019 11:10 PM GMT (Updated: 19 Feb 2019 11:10 PM GMT)

மதுரை கோட்ட ரெயில்வேக்கு உள்பட்ட ரெயில் நிலையங்களின் பிளாட்பாரங்களில் இட ஒதுக்கீடு அடிப்படையில் கடைகள் ஒதுக்கப்படுகின்றன.

மதுரை,

மதுரை கோட்ட ரெயில்வேக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள ரெயில் நிலையங்களில் உள்ள பிளாட்பாரங்களில் இன சுழற்சி அடிப்படையிலான இடஒதுக்கீட்டின் படி, கடைகள் அமைக்க அனுமதிக்கப்படுகிறது. அதன்படி, திண்டுக்கல், ராமநாதபுரம் ஆகிய ரெயில்நிலையங்களில் எஸ்.சி. பிரிவினருக்கும், ராஜபாளையத்தில் எஸ்.சி. பெண்கள் பிரிவுக்கும், மதுரை ரெயில் நிலையத்தில் எஸ்.டி. பெண்கள் பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. ராமேசுவரம் ரெயில் நிலையத்தில் எஸ்.டி. பிரிவினருக்கும், சாத்தூர் ரெயில்நிலையத்தில் சிறுபான்மை இனத்தை சேர்ந்த பெண்களுக்கும், திண்டுக்கல் ரெயில்நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கும், சாத்தூர் ரெயில்நிலையத்தில் சுதந்திரப்போராட்ட வீரர் பிரிவுக்கும், ராஜபாளையம் ரெயில் நிலையத்தில் சுதந்திரப்போராட்ட வீரர் பெண்கள் பிரிவுக்கும், விருதுநகர் ரெயில் நிலையத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழ் இருப்பவர்களில் பெண்கள் பிரிவுக்கும் கடைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ராமேசுவரம் ரெயில் நிலையத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழ் இருப்பவர்கள் ஜூஸ் கடை அமைக்க விண்ணப்பிக்கலாம்.

அதேபோல, டி மற்றும் இ பிரிவு ரெயில்நிலையங்களில், ஸ்ரீவைகுண்டம், புதுக்கோட்டை ஆகிய ரெயில்நிலையங்களில் எஸ்.சி. பிரிவினரும், கொடைரோடு, மணப்பாறை ரெயில்நிலையங்களுக்கு எஸ்.சி. பெண்கள் பிரிவை சேர்ந்தவர்களும், திருப்பரங்குன்றம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ரெயில்நிலையங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும், பழனி, குரும்பூர் ரெயில்நிலையங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் பெண்கள் பிரிவினரும், தேவக்கோட்டை ரோடு, அம்பாசமுத்திரம் ரெயில்நிலையங்களில் சிறுபான்மையினரும், சோழவந்தான் ரெயில்நிலையத்தில் சிறுபான்மை பிரிவை சேர்ந்த பெண்களும் கடைகள் நடத்த விண்ணப்பிக்கலாம். கொல்லம் மாவட்டம் குந்தாரா ரெயில்நிலையத்தில் எஸ்.சி. பிரிவினரும், கிளிக்கொள்ளூர், புனலூர் ஆகிய ரெயில்நிலையங்களுக்கு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பின பெண்கள் பிரிவினரும் விண்ணப்பிக்கலாம்.

வருகிற 22–ந் தேதி மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் அலுவலகத்தில் விண்ணப்பங்கள் பரிசீலனை நடைபெறுகிறது. அதன் பின்னர் கடைகள் ஒதுக்கப்படும். இந்த கடைகளை நடத்த 5 ஆண்டுகளுக்கு உரிமம் வழங்கப்படும். இதுகுறித்த விவரங்களுக்கு மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் அலுவலகத்தில் உள்ள வர்த்தக பிரிவை தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story