40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்கு பாரதீய ஜனதா பாடுபடும் பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி


40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்கு பாரதீய ஜனதா பாடுபடும் பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி
x
தினத்தந்தி 20 Feb 2019 11:15 PM GMT (Updated: 20 Feb 2019 7:56 PM GMT)

தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்கு பாரதீய ஜனதா பாடுபடும் என்று பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.

செம்பட்டு,

தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில் அமைந்துள்ள மெகா கூட்டணிக்கு மக்கள் வாழ்த்து சொல்லி வருகிறார்கள். இந்த கூட்டணியில் இன்னும் எத்தனை கட்சிகள் இடம் பெறும் என்பது அ.தி.மு.க.விடம் தான் உள்ளது. பல கட்சிகள் இணைய வாய்ப்பு இருக்கிறது. இதற்கான பணிகளை அ.தி.மு.க. மேற்கொண்டு வருகிறது. பா.ம.க.வுடன் கூட்டணி ஏற்படுத்தி இருப்பது பற்றி தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அநாகரீகமான வார்த்தைகளால் விமர்சனம் செய்து இருக்கிறார். அவர் பேசிய வார்த்தைகள் சாக்கடை எங்கு ஓடுகிறது என சந்தேகத்தை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது.

தமிழகத்தில் அ.தி.மு.க, பா.ம.க.வை ஊழலுக்கு அப்பாற்பட்ட கட்சிகளாக பாரதீய ஜனதா பார்க்கிறதா? என்ற கேள்விக்கு நான் சொல்லும் பதில் இதற்கு அப்பாற்பட்டதா, அதற்கு அப்பாற்பட்டதா? என்பதெல்லாம் கிடையாது. நாட்டு நலனுக்கு அப்பாற்பட்டு நிற்பவர்கள் ஒருபுறம். நாட்டு நலனை நினைத்து பார்ப்பவர்கள் ஒருபுறம். நாட்டு நலனை விரும்புபவர்கள் பாரதீய ஜனதாவுடன் கூட்டணி ஏற்படுத்தி உள்ளனர்.

திருச்சி தொகுதியில் பாரதீய ஜனதா போட்டியிடுமா? என கேட்கிறீர்கள். பாரதீய ஜனதாவை பொறுத்தவரை தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40-ம் எங்கள் தொகுதிகள் தான். கூட்டணி கட்சிகள் யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் அவர்களது வெற்றிக்காக பாரதீய ஜனதா பாடுபடும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஒவ்வொரு இந்தியனும் சாதி, மதம், இனம் மற்றும் மொழிகளுக்கு அப்பாற்பட்டு இந்தியா முழுவதும் ஒன்றிணைந்து தலைநிமிர்ந்து கைகோர்த்து நிற்கவேண்டும். அடுத்த ஐந்தாண்டுகளில் ஏற்படும் அப்படிப்பட்ட நிகழ்விற்கு ஒவ்வொரு இந்தியரும், அரசியல் கட்சிகளும் ஒன்று சேரவேண்டும்.

புல்வாமா தாக்குதல், பாதுகாப்பு விவகாரங்கள் ராணுவம் தொடர்புடையது. பிரதமர் நரேந்திரமோடி மீது 130 கோடி இந்திய மக்களும் மிகுந்த நம்பிக்கை வைத்து உள்ளனர். இதில் பாகுபாடு இன்றி ஒத்த கருத்துடன் இருக்கவேண்டும். பாரதீய ஜனதா, காங்கிரஸ், கம்யூனிஸ்டு என்று பிரித்து பார்க்கக் கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story