பள்ளிக்கு கல்விச்சீர் கொண்டு வந்த பெற்றோர்களை ஆரத்தி எடுத்து வரவேற்ற மாணவிகள்


பள்ளிக்கு கல்விச்சீர் கொண்டு வந்த பெற்றோர்களை ஆரத்தி எடுத்து வரவேற்ற மாணவிகள்
x
தினத்தந்தி 20 Feb 2019 11:00 PM GMT (Updated: 20 Feb 2019 8:33 PM GMT)

பள்ளிக்கு கல்விச்சீர் கொண்டு வந்த பெற்றோர்களை ஆரத்தி எடுத்து மாணவிகள் வரவேற்றனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை சந்தைப்பேட்டையில் நகராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் சார்பில் பள்ளிக்கு கல்விச்சீர் வழங்க முடிவு செய்தனர். இதையடுத்து குடம், பாய், குப்பை தொட்டி, விளையாட்டு பொருட்கள் மற்றும் கல்வி உபகரண பொருட்களை வாங்கி கொண்டு பெற்றோர்கள், மாணவர்கள் ஊர்வலமாக பள்ளிக்கு கொண்டு வந்தனர். பின்னர் பள்ளியில் மாணவிகள் கல்விச்சீர் கொண்டு வந்த பெற்றோர்களை ஆரத்தி எடுத்து வரவேற்றனர். இதை தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியர் விஜயமாணிக்கத்திடம் பொருட்களை வழங்கினர். இதில் வட்டார கல்வி அதிகாரி செங்குட்டுவன், மகேஸ்வரன், கருணாகரன், வட்டார வள மைய மேற்பார்வையாளர் தேவி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

கீரனூரை அடுத்த தென்னதிரையன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு பள்ளி மேலாண்மைக்குழு வினர், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், ஊர்பொதுமக்கள், முன்னாள் மாணவர்கள் சார்பில் பள்ளிக்கு தேவையான நாற்காலி, தண்ணீர் தொட்டி, டம்ளர், கடிகாரம், குடம், மின்விசிறி, விளையாட்டு பொருட்கள் போன்றவைகளை ஊர்வலமாக எடுத்து பள்ளிக்கு வந்தனர். பின்னர் பள்ளி தலைமையாசிரியர் கண்ணகியிடம் பொருட்களை வழங்கினர். இதில் ஆசிரியர் மேரிஜெயராணி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

திருவரங்குளம் அருகே மேட்டுப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கல்விச்சீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் வசந்தி முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் கோவிந்தம்மாள் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக வட்டார கல்வி அலுவலர் நடராஜன் ஜேம்ஸ், வட்டார வள மைய மேற்பார்வையாளர் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். தொடர்ந்து மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளிக்கு தேவையான நாற்காலி, மேஜை, குடம் மற்றும் கல்வி உபகரணங்களை ஊர்வலமாக கொண்டு வந்து தலைமையாசிரியரிடம் கொடுத்தனர். இதில் ஆசிரியர் பயிற்றுனர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

விராலிமலை ஒன்றியம் குருக்கத்தான்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கல்விச்சீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வட்டார கல்வி அலுவலர் (பொறுப்பு) துரையரசன் தலைமை தாங்கி பேசினார். பள்ளி தலைமை ஆசிரியை கிரேசாள்மேரி வரவேற்று பேசினார். பெற்றோர்கள், கிராம கல்விக்குழு, பள்ளி மேலாண்மை குழு மற்றும் பொதுமக்கள் பள்ளிக்கு தேவையான கல்விச்சீர் பொருட்களை ஊர்வலமாக கொண்டு வந்து தலைமை ஆசிரியரிடம் வழங்கினர். இதில் வட்டார வள மைய மேற்பார்வையாளர் புவனேஷ்வரி, ஆசிரியர் பயிற்றுனர் ரோஸ்மேரி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் மலர்கொடி மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

Next Story