முனிமுக்தீஸ்வரர் கோவில் மாசி மக தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்


முனிமுக்தீஸ்வரர் கோவில் மாசி மக தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
x
தினத்தந்தி 20 Feb 2019 10:30 PM GMT (Updated: 20 Feb 2019 9:06 PM GMT)

சின்னதாராபுரத்தில் உள்ள முனிமுக்தீஸ்வரர் கோவிலில் மாசி மக தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

க.பரமத்தி,

கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியம், சின்னதாராபுரத்தில் பிரசித்தி பெற்ற முனிமுக்தீஸ்வரர் கோவில் உள்ளது.இங்கு முனிமுக்தீஸ்வரருக்கும், அகிலாண்டேஸ்வரிக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளன. இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மக தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்தாண்டும் மாசி மக தேரோட்ட விழா கடந்த 13-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா தொடங்கிய நாளில் இருந்து தினமும் சின்னதாராபுரத்தை சுற்றியுள்ள 18 பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் விழாவில் கலந்துகொண்டு சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.

தேரோட்டம்

முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் மாலை தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி சுவாமி சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். அதனை தொடர்ந்து திரளான பக்தர்கள் சின்னதாராபுரம் கடைவீதியில் இருந்து தேரை வடம் பிடித்து இழுத்தனர்.பின்னர் தேரை மாரியம்மன் கோவில் வீதி வழியாக இழுத்து சென்று நிறுத்தினர்.இதையடுத்து நேற்று காலை மீண்டும் தேர் இழுக்கப்பட்டு அக்ரஹாரம், பழைய காவல் நிலையம் வழியாக சென்று கடைவீதியில் நிறுத்தப்பட்டது. பின்னர் சிறப்பு தீபாராதனை நடந்தது.

திரளான பக்தர்கள்

தேரோட்டத்தில் வன்னியர்குல சத்திரியர்கள், தென்னிலை முதன்மைகாரர்கள், பெருங்குடி வகையறாக்கள், கூடலூர் வெண்டுவ, பண்ணை, பனைய குலத்தினர், செங்குந்த முதலியார்கள், தொட்டம்பட்டி மணியம் வகையறா, சின்னதாராபுரம் செட்டியார் வகையறா, நடந்தை பட்டக்காரர்கள், கோடந்தூர், தொக்குப்பட்டி கெளதம மகரிஷி வகையறா, புள்ளாக்கவுண்டம்பாளையம். காளிபாளையம், தர்மகோடங்கிபட்டி பொதுமக்கள், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை மற்றும் முனிமுக்தீஸ்வரர் திருப்பணி மன்றத்தினர் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை சின்னதாரா புரம் போலீசார் செய்திருந்தனர். 

Next Story